அமித் ஷா என்னை கண்டிக்கவில்லை… தமிழிசையின் விளக்கம் உண்மையா?
தமிழக பாரதிய ஜனதாவில் அண்ணாமலைக்கும், தமிழிசைக்கும் இடையே தர்மயுத்தம் நடந்துகொண்டிருக்கிறது. அதிமுகவுடன் கூட்டணி அமைத்திருந்தால் நாங்கள் எல்லாம் வென்றிருப்போம் என தமிழிசை செளந்தர்ராஜன் அண்ணாமலையை மறைமுகமாகத் தாக்க, அண்ணாமலை ஆர்மி தமிழிசையை சமூக வலைத்தளங்களில் விமர்சிக்க பிரச்சனை அடுத்தக்கட்டத்துக்கு நகர்ந்தது.
நேரடியாகவே அண்ணாமலையின் நடவடிக்கைகளையும், அவருக்கு சார்பாக இயங்கும் பாஜக ஐடி விங்கையும் கண்டித்தார் தமிழிசை. இது தலைமையின் கவனத்துக்கு கொண்டுசெல்லப்பட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழிசை மேல் அதிருப்தியானர்.
இதன் வெளிப்பாடாக சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டபோது மேடையில் வணக்கம் சொல்லவந்த ஆந்திராவின் முன்னாள் ஆளுநரான தமிழிசையை அழைத்து கை விரல்களை உயர்த்திக் காட்டிப்பேசினார் அமித் ஷா.
‘’அண்ணாமலை அடங்கிப்போக வேண்டும்… தேவையில்லாமல் பிரச்சனை செய்யக்கூடாது'’ என அமித் ஷா எச்சரித்ததாக அண்ணாமலை ஆதரவாளர்கள் செய்தி பரப்ப ஆரம்பித்துவிட்டனர். இதற்கு விளக்கம் நேற்று இரவு வெளியிட்டிருக்கிறார் தமிழிசை.
‘’2024 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப்பிறகு என்னை முதல்முறையாக சந்திக்கும் அமித் ஷா தேர்தலுக்குப் பிந்தைய ஃபாலோ அப் மற்றும் எதிர்கொண்ட சவால்கள் குறித்து கேட்டார். தொகுதிப் பணிகளை முழுத்தீவிரத்தோடு கவனிக்கச் சொன்னார். தேவையற்ற வதந்திகள் பரவுவதற்காகவே இந்த விளக்கம்'’ என தமிழசை அவரது X பக்கத்தில் எழுதியிருக்கிறார்.
ஆனால், தமிழிசையின் விளக்கத்துக்கு கீழாகவே வந்து அண்ணாமலை ஆர்மி என்கிற பெயரில் தமிழிசையை தரக்குறைவாக விமர்சித்துவருகிறார்கள்.
தமிழிசை வதந்திகள் பரவுவதைத் தடுப்பதற்காக இப்படியொரு விளக்கம் அளித்திருந்தாலும் அமித் ஷா உண்மையிலேயே தமிழிசையைக் கூப்பிட்டு கண்டித்தார் என்கிறார்கள் பாஜக நிர்வாகிகள்.