''பாஜக பல் இல்லாத பாம்பு'' என விமர்சித்த திருமாவளன்… நிர்மலா சீதாராமன் பதிலால் கொந்தளிப்பு!
பாராளுமன்றத்தில் திருமாவளவன் பேசும்போது ‘’பாஜக பல் இல்லாத பாம்பைப்போல, கொம்பில்லாத மாட்டைப்போல வலுவிழந்து உட்கார்ந்திருக்கிறது’’ என்று விமர்சித்தார்.
தொடர்ந்து பேசியவர், ‘’நேஷனல் டெஸ்ட்டிங் ஏஜென்சியைக் கலைக்கவேண்டும். அவர்கள் தேர்வுகளை நடத்த ஆரம்பித்தப்பிறகுதான் முறைகள் நடக்கிறது. நீட் தேர்வை முழுமையாக நீக்கவேண்டும். தமிழக சட்டமன்றத்தில் இரண்டு முறை நீட் தேர்வை ரத்து செய்யவேண்டும் என தீர்மானம் நிறைவேற்றி குடியரசுத்தலைவருக்கு அனுப்பிவைத்தபோதும், அதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது வெட்கக்கேடானது. அதை நான் கண்டிக்க கடமைப்பட்டிருக்கிறேன்’’ என்றவர் போதைப்பொருள்கள் குறித்துப் பேசினார்.
இந்தியா முழுக்க போதைப்பொருட்கள் புழக்கத்தில் இருக்கின்றன. இதனால் இளம்தலைமுறையினர் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர். கள்ளச்சாராயத்தால் மரணங்கள் நிகழ்கின்றன. 4 மாநிலங்களைத் தவிர இந்தியா முழுக்க உள்ள எல்லா மாநில அரசுகளுமே நேரடியாக மதுவை விற்பனை செய்துவருகின்றன. தேசிய மதுவிலக்கு கொள்கையை அமல்படுத்தவேண்டும். இந்தியா முழுக்க மது விற்பனைக்குத் தடை விதிக்கவேண்டும்'’ என்று பேசினார் திருமாவளவன்.
உடனே எழுந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ’’தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் குடித்து 56 பேர் இறந்திருக்கிறார்கள். முதலில் தமிழ்நாட்டுக்குப் போய் பாடம் எடுங்கள். எங்களுக்குப் பாடம் எடுக்காதீர்கள்’’ எனச்சொல்ல நிர்மலா சீதாராமன் பேச்சுக்கு திமுக எம்பிகள் எதிர்ப்புத் தெரிவித்து குரல் எழுப்ப நாடாளுமன்றத்தில் கூச்சல், குழப்பம் சூழ்ந்தது.