ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் சந்தேகம்… மு.க.ஸ்டாலின் திருமாவளவன் சந்திப்பின் பின்னணி என்ன?!
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த வாரம் ஜூலை 5-ம் தேதி மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் பெரும் தமிழ்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் எம்பியுமான தொல் திருமாவளவன், சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்தார்.
கூட்டணியில் இருந்துகொண்டே சட்டம் ஒழுங்கு சரியில்லை என திருமாவளவன் பேசியது ஸ்டாலினுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியதையும், திமுகவின் மூத்த நிர்வாகிகள் இதுகுறித்து ஏற்கெனவே திருமாவளவனிடம் பேசியதையும் நாம் செய்தியாக வெளியிட்டிருந்தோம்.
இந்த சூழலில்தான் ஸ்டாலினை சந்தித்திருக்கிறார் திருமாவளவன். முதல்வர் ஸ்டாலின் உடனான சந்திப்புக்கு பிறகு திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார்.
’தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க பாஜக உள்ளிட்ட கட்சிகள் முயற்சி செய்து வருகிறது. ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் அரசியல் சதித் திட்டம் இருப்பதாக சந்தேகம் வருகிறது. இதனை செய்ய திட்டமிட்ட கூலிப் படையைச் சேர்ந்த அனைவரையும் கைது செய்ய வேண்டும்’’ என கோரிக்கை வைத்ததாகச் சொல்லியிருக்கிறார் திருமாவளவன்.
நீட் தேர்வு ரத்து, கிரிமினல் சட்டங்கள் சீரழிவு தொடர்பாக முதலமைச்சரிடம் மனு அளித்ததாகவும், அரசியல் செயல் திட்டங்களுக்காக தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க பாஜக போன்ற சில அரசியல் கட்சிகள் முயற்சி செய்வதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி சந்தேகிக்கிறது எனவும், ஆம்ஸ்ட்ராங் படுகொலை சம்பவத்தில் காவல்துறை நடவடிக்கையில் இறங்குவதற்கு முன்பாகவே பாஜக சிபிஐ விசாரணை கூறியது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார் தொல்.திருமாவளவன்.