‘’தமிழிசை,அண்ணாமலை,எஸ்வி சேகர்… நடவடிக்கை எடுக்காததற்கு சாதிதான் காரணமா?’’ - திருச்சி சூர்யா கேள்வி!
கடந்தவாரம் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார் என பாஜகவின் அடிப்படை உறுப்பினர் என்பதில் இருந்துகூட நீக்கப்பட்டார் திருச்சி சூர்யா. மாநிலங்களவை எம்பியும் திமுகவின் மூத்த தலைவருமான திருச்சி சிவாவின் மகன்தான் திருச்சி சூர்யா என அழைக்கப்படும் சூர்யா சிவா.
திருச்சி சூர்யா கட்சியில் இருந்து நீக்கப்பட்டதில் இருந்தே தொடர்ந்து தமிழக பாஜகவுக்கு எதிராக எக்ஸ்(ட்விட்டர்) தளத்தில் எழுதிவருகிறார். ஊழல் பட்டியல் தொடங்கி தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கிவரும் சூர்யா, சாதி அடிப்படையில்தான் பாஜகவில் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என குற்றம்சாட்டியிருக்கிறார்.
‘’கட்சியில் ரௌடிகள் இருக்கிறார்கள் என்றும், அதிமுகவுடனான கூட்டணியை கெடுத்து வெற்றியை தடுத்து விட்டார் என்றும் மாநிலத் தலைவரின் செயல்பாட்டையும் விமர்சனம் செய்த தமிழிசை மேல் நடவடிக்கை ஏன் இல்லை? நாடார் என்பதாலா?
தமிழிசை சொன்னதை உண்மை என்று இந்திய தேசிய பாஜக தலைமை கருதி இருந்தால் அண்ணாமலை மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அதற்கு தடையாக இருந்தது எது கவுண்டர் லாபியா?
தமிழ்நாட்டில் பாஜக நாற்பது இடங்களில் தோற்றதிற்கு வீட்டு வாசலில் வெடி வெடித்து கொண்டாடிய, திமுகவின் கலைஞர் 100 நிகழ்ச்சியில் மேடை ஏறி உரையாற்றிய SVe.சேகர் இன்னும் பாஜக உறுப்பினராக இருக்கிறார் ஏன் அவர் மீது நடவடிக்கை இல்லை? பிராமணர் என்பதாலா? சாதி படிநிலை அடிப்படையில்தான் நடவடிக்கை பாயுமா?
எல்லோரும் இந்து என்று மேடையில் ஒப்புக்கு சொல்லிவிட்டு, சாதி லாபிகளுக்கு அடிபணிந்து Social Engineering அப்பட்டமாக அம்பலப்பட்டிருக்கிறது’’ என்று எழுதியிருக்கிறார் திருச்சி சூர்யா.
அத்தோடு ‘’திமுகவின் முதல் குடும்பத்தை குற்றம் சுமத்தி யோக்கிய வேடம் போட்டுவிட்டு, மணல் கடத்தல் கும்பலிடம் மாதம் 50 லட்சத்திலிருந்து 80 கோடி வரை ஆட்டை போடும் பாஜக பிரமுகர்கள் பட்டியல் ஆன் தி வே’’ ட்வீட் செய்து தமிழக பாஜகவை அலெர்ட் மோடிலேயே வைத்திருக்கிறார் திருச்சி சூர்யா.