டொனால்ட் ட்ரம்ப் : துப்பாக்கியால் சுட்ட 20 வயது இளைஞன்... பாதுகாப்பில் கோட்டைவிட்ட சீக்ரெட் சர்வீஸ்!
நேற்று மாலை பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள பட்லர் எனும் இடத்தில் தேர்தல் பரப்புரை நிகழ்வுக்காக மேடையேறிய முன்னாள் அதிபர் ட்ரம்ப் மீது படுகொலை தாக்குதல் நிகழ்த்தப்பட்டது உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. சீக்ரெட் சர்வீஸ் உள்ளிட்ட துப்பாக்கிய ஏந்திய பாதுகாப்பு காவலர்கள் பலர் இருந்தும் அவர்கள் முன்பாகவே நிகழ்ந்த தாக்குதல் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
திடீரென மேடையில் ‘பாப்' சத்தம்போல கேட்க, முதலில் எங்கே இருந்து சத்தம் வருகிறது என ட்ரம்ப்பும் பார்க்க, சட்டென காதைப்பிடித்துக்கொண்டு ட்ரம்ப் கீழே உட்கார்ந்த பிறகுதான் அவர் மீது துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தப்படுவதே எல்லோரது கவனத்துக்கும் வந்தது. உடனடியாக அவரது பாதுகாவலர்கள், சீக்ரெட் சர்வீஸ் ஏஜென்ட்கள் அவரை சூழ்ந்துகொண்டு காருக்குள் அழைத்துசென்று அங்கிருந்து மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர்.
பிறகு நடந்த தேடுதல் வேட்டையில் மேடைக்கு எதிரே இருந்து ஒரு கட்டத்தின் மேல் இருந்து துப்பாக்கியால் ட்ரம்ப் குறிவைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு, துப்பாக்கியால் ட்ரம்ப்பை சுட்டதாக கருதப்படும் நபர் காவலர்களால் சுட்டுகொலை செய்யப்பட்டார். குற்றவாளிகள் என கருத்தப்படும் மேலும் இருவர் போலீஸ் தாக்குதலில் தீவிரமாக காயமடைந்துள்ளனர்.
ட்ரம்ப்பை சுட்டவர் பென்சில்வேனியாவைச் சேர்ந்த 20 வயது இளைஞர் என்றும், கொலைக்கான காரணம் இன்னும் சரியாகத் தெரியவில்லை எனவும் FBI தரப்பில் இருந்து தகவல்கள் வெளியாகியிருக்கிறது. ட்ரம்ப்பை கொலை முயற்சிக்கு AR-15 செமி ஆட்டோமேடிக் ரைஃபிளைப் பயன்படுத்தப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.
FBI அமைப்பின் சிறப்பு அதிகாரி கெவின் ரோஜெக், இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை படுகொலை முயற்சி என உறுதிப்படுத்தியிருக்கிறார். மேலும் அவர் ‘’இந்த நிகழ்சிக்கு முன்பாக ட்ரம்ப்பின் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என எந்த ஒரு உளவுத்தகவலும் எங்களுக்கு கிடைக்கவில்லை’’ என்று சொல்லியிருக்கிறார்.