காலில் விழச்சொல்லி செட்அப் செய்ததா விஜய் டீம்? - கள்ளக்குறிச்சியில் நடந்தது என்ன?
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து சிகிச்சைபெறுபவர்களை நேற்றிரவு நேரில் சந்தித்தார் நடிகர் விஜய். ஆனால், இந்த சந்திப்பு முழுக்க முழுக்க விஜய்யின் அரசியல் விளம்பரத்துக்காக திட்டமிடப்பட்டது என்கிற விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.
நடிகரும், தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் தலைவருமான விஜய் நேற்று காலை கள்ளக்குறிச்சி கள்ளச்சாரய விவகாரம் குறித்து தமிழக அரசுக்கும், காவல்துறைக்கும் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்திருந்ததோடு, நேற்று மாலை பாதிக்கப்பட்ட மக்களை நேரிலும் சந்தித்தார். அப்போது மருத்துவமனைக்குள் விஜய் நுழையும்போது, விஜய்யின் கட்சியைச் சார்ந்தவராக சொல்லப்படும் ஒருவர், ஒரு பெண்ணின் காதில் ஏதோ சொல்கிறார். உடனே தன்னை நோக்கி வரும் விஜய்யின் காலில் விழுந்து ‘’காப்பாத்துங்க தலைவா’’ என கதறி அழுகிறார் அந்தப்பெண்.
இந்த வீடியோதான் இப்போது சமூக வலைதளங்களில் டிரெண்ட்டாக வருகிறது. அரசியல் கட்சி ஆரம்பித்தப்பிறகு முதல்முறையாக இதுபோன்றதொரு நிகழ்வுக்கு வரும் விஜய் இதை முழுக்க முழுக்க அரசியல் விளம்பரத்துக்காக பயன்படுத்தியதற்கான உதாரணமே இந்த வீடியோ என்கிற சர்ச்சை இப்போது சுற்ற ஆரம்பித்திருக்கிறது.
‘’கள்ளக்குறிச்சி சாவு எண்ணிக்கை பற்றிய செய்திகளை மீடியாக்களில் இருந்து மறைக்க நினைக்கிறது தமிழக அரசு. அதனால்தான் விஜய்யை மருத்துவமனைக்குள் அனுமதித்து, விஜய் சந்திப்பு செய்திகளை வைரல் ஆக்கி அதன்மூலம் கள்ளக்குறிச்சி விவகாரத்தை திசைதிருப்ப நினைக்கிறது. அதில் கிட்டத்தட்ட வெற்றியும் பெற்றுவிட்டது'’ என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.