இந்தியாவின் முதல் நாள் வெற்றி, தோல்வி என இரண்டும் கலந்து இருந்தது. பேட்மிண்டன், ஹாக்கி, குத்துச்சண்டை, டேபிள் டென்னிஸ், துப்பாக்கி சுடுதல், படகோட்டுதல் என ஆறு போட்டிகளில் இந்தியா கலந்துகொண்டது.
பாரிஸ் ஒலிம்பிக்கின் முதல் நாளில் பேட்மிண்டன் பெண்கள் இரட்டையர் போட்டியின், குரூப் C- பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் அஷ்வினி பொன்னாப்பா, தனிஷா கிராஸ்ட்டா இணை, தென் கொரியாவின் காங் ஹீ-யோங், கிம் சோ-யோங் இணையுடன் மோதியது. இதில் தென்கொரியா இணை இந்திய இணையை மிகச்சுலபமாக வெற்றிகண்டது. 18-21, 10-21 என தோல்வியடைந்தது அஷ்வினி பொன்னப்பா, தனிஷா கிராஸ்டோ இணை.
போட்டியை நடத்தும் பிரான்ஸின் வீரர்களை சந்தித்து வெற்றிகண்டது இந்தியா. ஆண்கள் இரட்டையர் பிரிவில் குரூப் C பிரிவில் இந்தியாவின் சிராக் ஷெட்டியும், ரங்கிரெட்டியும் பிரான்ஸின் லார்வி, லபர் இணையுடன் மோதினார்கள். இதில் இந்திய இணை 21-17, 21-14 என நேர் செட்டில் வெற்றிபெற்றது.
பேட்மிண்டன் ஒற்றையர் போட்டியில் குரூப் L பிரிவில் இந்தியாவின் லக்ஷயா சென்னும், கெளதமாலாவின் கெவின் கார்டனும் மோதினார்கள். இதில் 21-8, 22-20 என நேர்செட்டில் லக்ஷயா சென் வெற்றிபெற்றார்.
பாரிஸ் ஒலிம்பிக்கில் ஹாக்கி B - பிரிவில் இந்தியாவும் நியூஸிலாந்தும் மோதின. மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஆட்டத்தின் முதல் 15 நிமிடங்களிலேயே நியூஸிலாந்து பெனால்ட்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி கோல் அடித்தது. இந்தியா 0-1 என பின்னணியில் இருக்க இந்தியாவின் மத்நீப் சிங், விவேக் சாகர் பிரசாத் இருவரும் அடுத்தடுத்து கோல் அடிக்க இந்தியா 2-1 என முன்னிலைப்பெற்றது. ஆனால், ஆட்டம் முடிய 7 நிமிடங்களே இருந்த நிலையில் நியூஸிலாந்தின் சைமன் சைல்ட் கோல் அடிக்க 2-2 என ஆட்டம் டிராவை நோக்கிப்போக, போட்டி முடிய இரண்டே நிமிடங்கள் இருக்கும் நிலையில் இந்தியாவின் ஹர்மன்ப்ரீத் சிங் பெனால்ட்டி வாய்ப்பை பயன்படுத்தி இந்தியாவை 2-1 என வெற்றிபெறவைத்தார். இந்தியா அடுத்தப்போட்டியில் இந்தியா நாளை மாலை 4.15 மணிக்கு அர்ஜென்டினாவை எதிர்கொள்கிறது.
குத்துச்சண்டை பாண்டம்வெயிட் பிரிவில் இந்தியாவின் ப்ரீத்தி பவாரும், வியட்நாமின் வோ தி கிம் அன்ஹ் என்பவரும் மோதினார்கள். இதில் புள்ளிகள் அடிப்படையில் 5-0 என வியட்நாம் வீராங்கணையை வீழ்த்தினார் ப்ரீத்தி பவார்.
டேபிள் டென்னிஸ் ப்ரிலிம்னரி சுற்றில் இந்தியாவின் ஹர்மித் தேசாயும், ஜோர்டனின் ஜைத் அபோ யமனும் மோதினார்கள். இதில் ஹர்மித் தேசாய் 11-7, 11-9, 11-5, 11-5 என 4-0 என வெற்றிபெற்றார்.
10 மீட்டர் ஏர் பிஸ்டல் தகுதிச்சுற்றுப் போட்டியில் இந்தியாவின் மனு பாக்கர் அசத்தலாக குண்டுகளை சுட்டு மூன்றாம் இடம் பிடித்து இன்று நடைபெற இருக்கும் இறுதிச்சுற்றில் விளையாட இருக்கிறார். இன்று மனு பாக்கர் வெற்றிபெற்றால் இந்தியா பதக்க கணக்கைத் தொடங்கும்.
10 மீட்டர் ஆடவர் ஏர் பிஸ்டல் போட்டியின் தகுதிச்சுற்றில் கலந்துகொண்ட இந்தியாவின் சரப்ஜோத் சிங் ஒன்பதாவது இடம்பிடித்து இறுதிப்போட்டிக்குள் நுழையும் வாய்ப்பை இழந்தார். தகுதிச்சுற்றில் முதல் 8 வீரர்கள் மட்டுமே தகுதிபெற முடியும் என்கிற நிலையில் ஜஸ்ட் மிஸ் ஆனார் சரப்ஜோத் சிங்.
10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் போட்டியில் இந்தியாவின் ரமிதா ஜிந்தல் - அர்ஜுன் பபுட்டா, இளவேனில் வாலறிவன் - சந்தீப் சிங் என இரண்டு ஜோடிகள் போட்டியிட்டார்கள். இதில் முதல் நான்கு இடங்களைப் பிடிப்பவர்களே இறுதிப்போட்டிக்குத் தகுதிபெற முடியும் என்கிற நிலையில் இந்திய ஜோடிகளான ரமிதா ஜிந்தல் - அர்ஜுன் பபுட்டா ஆறாவது இடமும், இளவேனில் வாலறிவன் - சந்தீப் சிங் ஜோடி 12வது இடமும் பிடித்து வெளியேறியது.
படகோட்டுதல் போட்டியின் ஆடவர் சிங்கிள் ஸ்கல் போட்டியில் இந்தியாவின் பல்ராஜ் பன்வர் தோல்வியடைந்தார். முதல் மூன்று பேர் மட்டுமே அடுத்தச் சுற்றுக்குத் தகுதிபெற முடியும் என்கிற நிலையில் பன்வர் நான்காம் இடம்பெற்று தோல்வியடைந்தார்.