டோக்கியோ ஒலிம்பிக்ஸில் அவமானம்… பாரிஸ் ஒலிம்பிக்ஸில் வெண்கலம்… யார் இந்த மனு பாக்கர்?!
பாரிஸ் ஒலிம்பிக்ஸில் இந்தியாவுக்கான முதல் பதக்கத்தை வென்று தந்திருக்கிறார் மனு பாக்கர். தென் கொரிய வீராங்கனைகள் கிம் யே ஜி, ஓ யே ஜின் ஆகியோருடன் கடுமையாக மோதிய மனு பாக்கர் இறுதியில் வெண்கலப்பதக்கம் வென்றிருக்கிறார். ஒலிம்பிக்ஸில் துப்பாக்கி சுடுதலில் பதக்கம் வென்றிருக்கும் இந்தியாவின் முதல் பெண் என்கிற சாதனையையும் படைத்திருக்கிறார் 22 வயதான மனு பாக்கர்!
யார் இந்த மனு பாக்கர்?!
மல்யுத்தப் போட்டிகளுக்குப் புகழ்பெற்ற ஹரியானா மாநிலம் ஜஜ்ஜர் மாவட்டத்தில் பிறந்தவர் மனு பாக்கர். பாக்ஸிங்கில் முதலில் கவனம் செலுத்திய மனு, 2016 ரியோ ஒலிம்பிக்கிற்குப் பின் துப்பாக்கிச் சுடுதல் போட்டிகளில் ஈர்க்கப்பட்டு ஷூட்டிங்கில் இறங்கியவர்.
2017-ம் ஆண்டில், மனு பாக்கர் தனது முதல் தேசிய துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவின் நம்பர் 1 வீராங்கனையான ஹீனா சித்துவை தோற்கடித்து முதல்முறையாக கவனம் ஈர்த்தார். 16 வயதிலேயே, தனது திறமையால் இந்தியாவை மிரள வைத்தார் மனு பாக்கர்.
ஏமாற்றம் அளித்த டோக்கியோ ஒலிம்பிக்ஸ்!
மனு பாக்கரின் ஒலிம்பிக் கனவு 2021 டோக்கியோ ஒலிம்பிக்ஸில் வெற்றிகரமாக நிறைவேறவில்லை. 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் துப்பாக்கியில் பிரச்சனை ஏற்பட, அவமானகரமானத் தோல்வியுடன் வெளியேறினார் மனு பாக்கர். எந்த ஒரு பிரிவிலும் அவர் இறுதிப்போட்டிக்கு முன்னேறவில்லை. இந்த தோல்வி அவரை மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாக்க அடுத்த 25 நாட்களுக்கு துப்பாக்கியைத் தொட அல்ல, பார்க்கவே இல்லை மனு பாக்கர்!
மனுவின் மனதை மாற்றிய கேரள பயணம்!
டோக்கியோ ஒலிம்பிக் தோல்விக்குப் பிறகு, டோக்கியோவில் நடந்தவற்றை மறக்க மனு பாக்கர் தனது குடும்பத்தினருடன் கேரளாவுக்கு சுற்றுலா வந்திருக்கிறார். அங்கே குடும்பத்தினர் அனைவரும் சுற்றுலாவுக்கு சென்றுவிட ரூமில் தனியாக இருந்த மனு காபி போடுவதற்காக கையில் கெட்டிலை எடுத்தவர் நீண்ட நேரம் அப்படியே பிடித்து நின்றிருக்கிறார். "எதற்கு என்று தெரியாமலேயே என் கையில் இருந்த கெட்டிலை என்னால் விட முடியவில்லை. இதை ஷூட்டர்ஸ் ஹோல்டிங் ப்ராக்டிஸ் என்று சொல்வார்கள். அந்த நேரத்தில்தான் நான் மிகவும் குழம்பி இருக்கிறேன்… மீண்டும் கடுமையாகப் பயிற்சி செய்ய வேண்டும்" என உணர்ந்தேன் என தான் மீண்டு வந்த கதையை சொல்லியிருக்கிறார் மனு பாக்கர்.
கேரளாவில் இருந்து மீண்டும் டெல்லிக்கு வந்ததும் துப்பாக்கியைக் கையில் எடுத்து கடுமையாகப் பயிற்சி செய்ய ஆரம்பித்தவருக்கு அதன்பிறகு தோல்விகள் இல்லை.
‘’முடிவு என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம். முயற்சியைக் கைவிடக்கூடாது’’ என்பதுதான் மனு பாக்கர் அடிக்கடி சொல்வது. அதை இன்று வெண்கலப் பதக்கம் மூலம் நிரூபித்து காட்டியிருக்கிறார் மனு பாக்கர்.
இந்தியாவின் மூவர்ணக் கொடியை பாரிஸில் பறக்கவிட்டிருக்கும் மனு பாக்கருக்கு வாழ்த்துகள்.