பட்லரின் படைக்கு பாடம் புகட்டுமா இந்தியா… கோலி ஃபார்முக்கு வருவாரா?! INDvENG
ஃப்ளாஷ்பேக்: 2022 அரையிறுதிப்போட்டி
2022 டி20 உலகக்கோப்பை அரையிறுதிப்போட்டி அடிலெய்டில் நடந்தது. இந்தப்போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை இங்கிலாந்து தோற்கடித்தது. இந்தியாவின் 169 ரன் டார்கெட்டை விக்கெட்டே இழக்காமல் ஆடிமுடித்து இந்தியாவை வீட்டுக்கு அனுப்பியது இங்கிலாந்து. அதற்குப் பழிக்குப்பழி வாங்க இந்தியாவுக்கு இப்போது அருமையான வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
காரணம் அப்போதிருந்த இந்திய அணி அல்ல இப்போதிருப்பது. 2022 உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டிக்கும் 2024 அரையிறுதிப்போட்டிக்கும் இடையே இந்திய அணியில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது.
இந்தியாவின் மாற்றங்கள்!
புதிய கேப்டன் : ரோஹித் ஷர்மாவின் கேப்டன்சியின் கீழ் இந்த உலகக்கோப்பையை சந்திக்கிறது இந்தியா.
ரோஹித் ஷர்மா பேட்டிங் : ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ரோஹித் ஷர்மா 41 பந்துகளில் 92 ரன்கள் எடுத்து ஃபார்முக்கு வந்திருக்கிறார். இன்றைய போட்டியில் கோலியும் களத்தில் இறங்கிவிட்டால் இந்தியாவின் பேட்டிங் பட்டையைக் கிளப்பும்.
மிடில் ஆர்டர் இன் ஃபார்ம் : சூர்யகுமார் யாதவ் : நல்ல ஃபார்மில் இருப்பதோடு, ஹர்திக் பாண்டியா பேட்டிங், பெளலிங் என இரண்டிலுமே சிறப்பான பர்ஃபாமென்ஸை வெளிப்படுத்திவருகிறார். ஒன் டவுனில் இறங்கும் ரிஷப் பன்ட் மட்டுமே இன்னும் சரியான ஃபார்மில் இல்லை.
3-3 ஃபார்முலா : பெளலிங்கைப் பொறுத்தவரை பும்ரா, அர்ஷ்தீப், பாண்டியா என வேகப்பந்து வீச்சாளர்களும், குல்தீப், அக்ஸர், ஜடேஜா மூன்று சுழற்பந்து வீச்சாளர்களும் என 3-3 காம்பினேஷனில் பெளலிங் அட்டாக்கை கொண்டிருக்கிறது இந்திய அணி. இந்த ஸ்ட்ராங்கான பெளலிங் அட்டாக்கால் மிகவும் வலுவான பேட்டிங் டீமையும் அசைத்துவிடமுடியும் என்பது இந்தியாவின் மிகப்பெரிய பலம்.
இங்கிலாந்தில் என்ன மாறியிருக்கிறது!
பட்லர் பயம் : 2022-ல் இருந்த பேட்டிங் பலத்தோடு இங்கிலாந்து இப்போது இல்லை. ஜாஸ் பட்லர் ஃபார்முக்கு வருவதும் போவதுமாக இன்கசிஸ்டன்ட்டாக ஆடிவருகிறார்.
இரண்டு பெரிய தோல்விகள் : ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா என இரண்டு பெரிய அணிகளுடன் மோதிய போட்டியிலுமே இங்கிலாந்து இந்த உலகக்கோப்பையில் தோல்வியை சந்தித்திருக்கிறது.
மிரளும் மிடில் ஆர்டர் : பட்லர், ஃபில் சால்ட்டுக்கு அடுத்து களமிறங்கும் வில் ஜாக்ஸ், பேர்ஸ்டோ, ஹேரி புரூக், லயம் லிவிங்ஸ்டன் என இவர்கள் யாருமே நிலையான ஆட்டத்தை இதுவரை ஆடவில்லை. ஒரு போட்டியில் நன்றாக ஆடுவார்கள். இன்னொரு போட்டியில் சொதப்புவார்கள் என இங்கிலாந்தின் பேட்டிங் யூனிட் ஸ்ட்ராங்காக இல்லை.
பெளலிங் பலவீனம் : மொயீன் அலி, ஆதில் ரஷீத் என முழு நேர ஸ்பின்னர்கள். இதில் ஆதில் ரஷீத்தின் லெக் ஸ்பின் மட்டுமே எடுபடுகிறது. அவர் இந்தியாவுக்கு சிக்கலை தரக்கூடும்.
ஜோர்டன் எனும் புதிர் : வேகப்பந்து வீச்சில் ஆர்ச்சர், ஜோர்டன், மார்க் உட் என மூன்று பெளலர்கள் இருந்தாலும் இதில் அபாயகரமானவர் ஜோர்டன் மட்டுமே. டெத் ஓவர்களில் இவரது பந்துவீச்சு இந்திய பேட்ஸ்மேன்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தலாம்.
இந்தியாவின் கேம்பிளான் என்னவாக இருக்கும்?!
டாஸ் வென்றால் இந்தியா முதலில் பேட்டிங்கையே தேர்வு செய்யும்.
ஆரம்பத்தில் இருந்தே அடித்து ஆடவேண்டும் என்பதுதான் இந்தியாவின் வியூகமாக இருக்கும். அதன்படிதான் ரோஹித் ஷர்மாவின் பேட்டிங் அணுகுமுறை இருக்கும்.
ஸ்ட்ரைக் ரேட் 100-க்கு மேல் இருக்கவேண்டும் என்பதில் கவனம் செலுத்துவார்கள்.
பெளலிங்கில் பும்ராவுடனேயே அர்ஷதீப்பையும் ஆரம்பத்திலேயே இந்தியா பயன்படுத்தும்.
இங்கிலாந்தின் கேம்பிளான்?!
நாக் அவுட் போட்டிகளில் இந்தியாவுக்கு இருக்கும் அச்சத்தை இங்கிலாந்து கேப்டன் பட்லர் பயன்படுத்திக்கொள்ள நினைப்பார். அதற்கேற்றபடி அட்டாக்கிங் ஆட்டத்தையே இங்கிலாந்து ஆடும்.
டெத் ஓவர்களில் கிறிஸ் ஜோர்டனை பட்லர் முழுவதுமாகப் பயன்படுத்துவார்.
மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மூலம் நல்ல ரன்கள் கிடைக்க, பேட்டிங் ஆர்டரை இந்தப்போட்டியில் நிச்சயம் மாற்றி ஆடும் இங்கிலாந்து.
மழை அச்சுறுத்தல்?!
இன்றைய போட்டி மழையால் பாதிக்கப்படும் வாய்ப்புகள் அதிக அளவில் இருக்கிறது. மழை காரணமாக போட்டி கைவிடப்பட்டால், சூப்பர் 8 போட்டிகளில் அதிக வெற்றிகள் பெற்றதன் காரணமாக இந்தியா இறுதிப்போட்டிக்குத் தகுதிபெறும்.
வெற்றி யாருக்கு?
நடப்பு சாம்பியனான இங்கிலாந்து நிச்சயம் இந்தியாவை அச்சுறுத்தி வெற்றியை பறிக்க நினைக்கும். ஆனால், ரோஹித் ஷர்மா, கோலி என இரண்டு ஜாம்பவான்கள் விளையாடும் கடைசி உலகக்கோப்பையாக இது இருக்கலாம். பொறுப்பை உணர்ந்து இருவருமே ஆடினால், இன்று இந்தியா வெல்லவே அதிக வாய்ப்புகள் இருக்கிறது.