பிட்ச் முதல் பிளானிங் வரை… சொதப்பிய ஐசிசி… களையிழந்த டி20 உலகக்கோப்பை!
கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தியா பாகிஸ்தானுக்கு இடையேயான உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்தது. அமெரிக்கர்களுக்குத்தான் தங்கள் நாட்டில் கிரிக்கெட் உலகக்கோப்பை நடப்பது தெரியாது என்று பார்த்தால் இந்தியாவிலேயே பலருக்கும் தெரியாத வகையில் ரகசியமாக டி20 உலகக்கோப்பையை நடத்திக்கொண்டிருக்கிறது ஐசிசி. ‘’வேர்ல்டு கப்பா நடக்குது'’ எனக் கேட்கும் அளவுக்குத்தான் உலகக்கோப்பை போட்டிகளும், அதற்கான ப்ரமோஷன்களும் இருக்கின்றன.
பிட்ச்சையே முழுமையாக சோதிக்காத ஐசிசி!
2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் 2024 டி20 கிரிக்கெட் போட்டிகள் அமெரிக்கா மற்றும் மேற்கு இந்தியத் தீவுகளில் நடத்தப்பட இருப்பதாக அறிவித்தது ஐசிசி. ஆனால், 2023 ஆகஸ்ட் வரை அமெரிக்காவில் இரண்டு சர்வதேச மைதானங்கள்தான் தயாராக இருந்தன. நியூயார்க்கில் போட்டிகளை நடத்தவேண்டும் என முடிவெடுத்த ஐசிசி கிரிக்கெட் மைதானத்துக்கான இடத்தை தேர்வு செய்யவே இரண்டு ஆண்டுகள் எடுத்துக்கொண்டது. இப்போது போட்டிகள் நடக்கும் Nassau County Stadium இருக்கும் இடம் கடந்த ஆண்டு செப்டம்பரில்தான் இறுதி செய்யப்பட்டு கிரிக்கெட் ஸ்டேடியமாக மாற்றும் பணிகள் தொடங்கப்பட்டன. எட்டு மாதத்துக்குள் 4 பிட்ச்கள் அமைப்பது சாத்தியம் இல்லை என்பதோடு, பயிற்சிக்கான பிட்ச்களும் தயாரிக்கப்படவேண்டும் என்பதால் டிராப் இன் பிட்ச்களை(drop-in pitch) உருவாக்கும் யோசனையை முன்வைத்தது ஐசிசி.
டிராப் இன் பிட்ச்கள் என்றால் என்ன?
டிராப் இன் பிட்ச்கள் என்பது போட்டிகள் நடக்கும் மைதானத்திலேயே வைத்து உருவாக்கப்படும் பிட்ச்கள் இல்லை. வேறு ஒரு இடத்தில் வைத்து பிட்ச்கள் தயாரிக்கப்பட்டு பின்னர் போட்டிகள் நடைபெறும் மைதானத்துக்குள் கொண்டுவந்து ஃபிட் இன் செய்யப்படும். அதாவது நியூயார்க் ஸ்டேடியத்துக்கான பிட்ச்கள் ஆஸ்திரேலியாவின் அடிலெய்டில் உருவாக்கப்பட்டு டிசம்பர் மாதவாக்கில்தான் அமெரிக்காவுக்கே கொண்டுவரப்பட்டது. அப்போதும் நேரடியாக நியூயார்க் மைதானத்துக்குப் பிட்ச்களை கொண்டுவரமுடியவில்லை. காரணம் நியூயார்க்கில் டிசம்பர் முதல் மார்ச் வரை கடுமையான குளிர் இருந்ததால் ஃப்ளோரிடாவுக்குப் பிட்ச்கள் கொண்டு செல்லப்பட்டன. வெயிலில் இருந்தால்தான் பிட்சின் தன்மை கடுமையாகும் என்பதால் ஏப்ரல் மாதம்தான் நியூயார்க்குப் பிட்ச்கள் கொண்டுவரப்பட்டது.
ஜூனில் உலகக்கோப்பை போட்டிகள் தொடங்குவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் நியூயார்க்கில் அவசர அவசரமாக பிட்சை சரிபார்க்காமல், பயிற்சி ஆட்டகங்கள் நடத்தி பிட்சின் தன்மையை சோதிக்காமல் நேரடியாக உலகக்கோப்பை போட்டிகளை நடத்தி சொதப்பியிருகிறது ஐசிசி.
டி20 கிரிக்கெட் என்றாலே சிக்ஸர்கள் பழகிப்பார்த்த ரசிகர்கள், 100 ரன்களைத்தாண்டவே அணிகள் திணறுவதுப் பார்த்து சேனலை மாற்றிவிட்டார்கள்.
போட்டி அட்டவணை!
பிட்ச்சே முழுமையாக ரெடியாகாத நியூயார்க் மைதானத்தில் மட்டும் 8 போட்டிகள் அதுவும் 10 நாட்களுக்குள் என அட்டவணை வெளியிட்டது ஐசிசியின் அடுத்த சொதப்பல். இதனால் அடுத்தப்போட்டிக்குள் பிட்சின் தன்மையை மாற்றமுடியாமல் பிட்ச் க்யூரேட்டர்கள் திணறிவிட்டனர். அதோடு சில அணிகளுக்கு குறிப்பாக இந்தியாவுக்கு சாதகமாக ஐசிசி அட்டவணையை வெளியிட்டதும் சர்ச்சைக்குள்ளானது. அதாவது இந்தியா அமெரிக்கா போய் இறங்கியதில் இருந்தே நியூயார்க்கில் மட்டுமே தங்கி விளையாடும் வகையில் லீக் சுற்றின் முதல் மூன்று போட்டிகளுமே நியூயார்க் மைதானத்தில் வைக்கப்பட்டது. இது இந்திய அணி அங்கேயே தங்கியிருந்து பயிற்சி பெறுவதற்கும், நியூயார்க் பிட்சுக்குப் பழகுவதற்கும் ஏற்றவகையில் அமைந்துவிட்டதாக பல முன்னாள் வீரர்கள் விமர்சித்தனர்.
ப்ரமோஷன் இல்லை!
டி20 உலகக்கோப்பை வங்கதேசம், இலங்கையில் நடக்கும்போது அதற்கென பிரத்யேக தீம் பாடல்கள் தயாரிக்கப்பட்டு விளம்பரப்படுத்தப்பட்டன. 2014 வங்கதேச டி20 உலகக்கோப்பை தீம் பாடலான Char Chokka Hoi Hoi பாடல் இன்றுவரை புகழ்பெற்ற தீம் பாடலாக இருக்கிறது. அதேப்போல 2024 கிரிக்கெட் உலகக்கோப்பைக்கும் தீம் பாடலை கிராமி விருதுவென்ற ஷேன் பால் (Sean Paul) மற்றும் கெஸ் (Kes) ஆகியோரைக்கொண்டு ‘அவுட் ஆஃப் தி வேர்ல்டு’ என்கிற தீம் பாடலை உருவாக்கியது ஐசிசி. ஆனால், இப்படி ஒரு பாடல் வெளியாகியிருப்பதே யாருக்கும் தெரியாத வகையில் இந்த தீம் பாடலை ப்ரமோட் செய்யவே இல்லை ஐசிசி.
டிக்கெட் குளறுபடிகள்!
போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனையிலும் சொதப்பியது ஐசிசி. முதலில் லிமிடிட் டிக்கெட்கள் என அறிவித்துப்பின்னர் கிரிக்கெட் போட்டிகளின் டிக்கெட்டுகளுக்கே டிஸ்கவுன்ட் கொடுக்கும் நிலைமைக்கு கொண்டுவந்துவிட்டது ஐசிசி.
இவ்வளவு சொதப்பல்கள் நடந்தாலும் ஜூன் 19 முதல் சூப்பர் 8 போட்டிகள் மேற்கு இந்தியத் தீவுகளில் மட்டுமே நடக்க இருப்பதால் அடுத்தக்கட்டப் போட்டிகள் சுவாரஸ்யமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்!