விவாகரத்தில் முடிந்த முதல் திருமணம்… மீண்டும் காதலாகி கல்யாணத்தில் கலந்த ‘மகராசி’ ஜோடி!
முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்த நிலையில் ரீல் ஜோடியாக இருந்து தற்போது ரியல் ஜோடியாகி உள்ளனர் இரண்டு சன் டிவி பிரபலங்கள்.
சன் டிவியில் கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள், ஆயிரம் எபிசோடுகளுக்கு மேல் ஒளிபரப்பான மதிய நேரத் தொடர் ‘மகராசி’. இந்த சீரியலில் ஜோடியாக நடித்தவர்கள் ஸ்ரித்திகா மற்றும் ஆர்யன். 37 வயதாகும் ஸ்ரித்திகா சின்னத்திரை இயக்குநர் திருமுருகன் கோபியாக நடித்து பட்டிதொட்டியெங்கும் பிரபலமான ‘நாதஸ்வரம்’ சீரியலில் ஹீரோயினாக நடித்தவர். ‘நாதஸ்வரம்’ மூலம் தமிழ்நாட்டின் ஒவ்வொரு இல்லத்தரிசிகளிடமும் ஏற்கெனவே பரிட்சயமானவர் ஸ்ரித்திகா.
வெற்றிகரமான சீரியல் நடிகையாக இருந்த ஸ்ரித்திகா கேரளாவைச் சேர்ந்த சனீஷ் என்பவரை கிறிஸ்தவ முறைப்படி 2019-ல் திருமணம் செய்துகொண்டார். இந்தத் திருமணத்துக்கு சில மாதங்களுக்கு முன்னர்தான் ஸ்ரித்திகாவும், ஆர்யனும் இணைந்து நடித்த ‘மகராசி’ சீரியலின் ஒளிபரப்பு சன் டிவியில் தொடங்கியது.
இதற்கிடையே நடிகரும், பாடகருமான எஸ்எஸ்ஆர் ஆர்யன் நிவேதிதா பங்கஜ் என்னும் சீரியல் நடிகையை 2018-ல் திருமணம் செய்தார். இவர்கள் இருவரும் 2021-ம் ஆண்டு விவாகரத்துப் பெற்று பிரிந்துவிட்டனர்.
ஸ்ரித்திகா - ஆர்யன் இருவருக்குமே விவாகரத்து நடக்க ‘மகராசி' சீரியலில் நடிக்க ஆரம்பித்தப்பிறகு இருவரும் நெருங்கிப்பழக ஆரம்பித்ததுதான் காரணம் என அப்போதே பேச்சுகள் பரவ ஆரம்பித்தது. ஆர்யனை விவாகரத்து செய்த நிவேதிதா வேறு ஒரு சீரியல் நடிகரை காதலிப்பதாகவும் இன்ஸ்டாகிராமிலும் பதிவிட்டார். இந்த சூழலில் ஆர்யன் - ஸ்ரித்திகா இருவரும் சேர்ந்துவாழ்ந்துவந்த நிலையில் பதிவுத் திருமணம் செய்துகொண்டதாக நேற்று இன்ஸ்டாகிராமில் அறிவித்தனர்.
ஸ்ரித்திகாவின் பெயர் இன்னும் இன்ஸ்டாகிராமில் ஸ்ரித்திகா சனீஷ் என்றே இருப்பதற்கும் இந்தத் திருமணப்பதிவில் விளக்கம் கொடுத்திருக்கிறார். ‘’தொழில்நுட்ப பிரச்சனை காரணமாக பெயரை மாற்றமுடியவில்லை. விரைவில் மாற்றிவிடுவேன்'’ என்று சொல்லியிருக்கிறார் ஸ்ரித்திகா.
நேற்றுதான் திருமணம் செய்துகொண்டதாக ஸ்ரித்திகாவும், ஆர்யனும் அறிவித்தாலும் இவர்களின் பதிவுத்திருமணம் கடந்த ஆண்டே நடந்துவிட்டதாக சொல்கிறார்கள் இருவருக்கும் நெருக்கமானவர்கள்!