கலாநிதி மாறன், திருச்செல்வம், மாரிமுத்து... ‘எதிர் நீச்சல்’ சீரியல் முடிவுக்கு வர இவர்கள் அல்ல காரணம்... ஆனால்?
கடந்த சில வாரங்களாக தொலைக்காட்சி ரசிகர்கள் மத்தியில் விவாதப்பொருளாக மாறியிருப்பது ‘எதிர் நீச்சல்’ சீரியல். சன், விஜய், ஜீ தமிழ், கலைஞர் என எல்லா டிவி சேனல்களும் போட்டிப்போட்டுக்கொண்டு சீரியல்களை ஒளிபரப்பினாலும் மக்களிடையே பேசுபொருளாகும் சீரியல்கள் என்பது மிகவும் குறைவு. அந்தவகையில் சமீபத்தில் தொலைக்காட்சி உலகில் அதிர்வலைகளை ஏற்படுத்திய சீரியல் ‘எதிர் நீச்சல்’. காரணம் இதன் கதை!
கலாநிதி மாறன் கொடுத்த ஐடியா?
ஆணாதிக்க அடக்குமுறைக்கு எதிரான ஒரு பெண்ணின் போராட்டமே எதிர் நீச்சல் சீரியலின் ஒன்லைன். ‘பிகில்' படத்தில் அக்ரஹாரத்தில் இருந்து கால்பந்து விளையாடப் புறப்படும் இளம்பெண் சந்திக்கும் பிரச்சனைகளை மனதில் வைத்து கலாநிதி மாறன் சன் டிவி நிர்வாகிகளிடம் பேசும்போது ‘’இதில் ஒரு சீரீயலுக்கான கதை இருக்கிறது’’ என்று சொல்ல, அதுதான் ‘எதிர் நீச்சல்’ சீரியலுக்கான ஆரம்பப்புள்ளி.
எம்.ஏ, எம்.காம் என நன்றாகப் படித்த பெண்களை திருமணம் செய்து தங்கள் வீட்டுக்கு கொண்டுவந்து அவர்களை கிச்சனுக்குள் சமையல்காரிகளாக முடக்கும் ஆதிமுத்து குடும்பத்தின் மூத்த ஆண் வாரிசு குணசேகரனுக்கும், அந்த வீட்டுக்கு கடைசி மருமகளாக வரும் ஜனனிக்கும் இடையேயான கருத்தியல் யுத்தமே ‘எதிர் நீச்சல்’ சீரியலாக உருவெடுத்தது. அதுவும் இந்தக் கதையின் மிக முக்கிய கேரெக்டராக ‘பட்டம்மாள்' என்கிற பாட்டியின் கதாபாத்திரம் எழுதப்பட்டிருந்த விதம் தமிழ் சீரியல்களில் புதுவிதமாகவும், எல்லோரும் பாராட்டும்படியாகவும் அமைந்தது.
கதைப்படி குணசேகரனின் பாட்டியான பட்டம்மாள் தன்னுடைய பேரன்களின் ஆணாதிக்கத் திமிரை வீட்டுக்கு கடைசி மருமகளாக வரும் ஜனனி மூலம் எப்படி அடக்குகிறார் என்பது முக்கிய கதையாக விஸ்வரூபம் எடுத்தபோது ‘எதிர் நீச்சல்' சீரியல் கதையாகவும், டிஆர்பியாகவும் உச்சம்பெற்றது. சமூக கட்டுப்பாட்டுகள் மற்றும் ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் பின்னிப்பிணைந்திருக்கும் ஆணாதிக்கத்துக்கு எதிராக பெண்களின் உரிமைகளை கேள்வி கேட்க தூண்டியது ‘எதிர் நீச்சல்' சீரியலின் மிகப்பெரிய வெற்றி.
744 எபிசோடுகள்!
கடந்த 2022 பிப்ரவரி ஏழாம் தேதி தொடங்கிய எதிர்நீச்சலின் பயணம் ஜூன் 8, 2024-ல் முடிவுக்கு வந்தது. மொத்தம் 744 எபிசோடுகள் ஒளிபரப்பான எதிர் நீச்சல் உச்சபட்சமாக 12 TVR எனச்சொல்லப்படும் டிஆர்பி ரேட்டிங்கைப் பெற்று தமிழ்நாட்டின் நம்பர் ஒன் சீரியலாக உயர்ந்தது. முதலில் 9.30 மணிக்கு ஒளிபரப்பாக ஆரம்பித்த சீரியலுக்கு வரவேற்பு அதீதமாகக் கிடைக்க தொலைக்காட்சிகளில் மிக முக்கியமான நேரமான 9 மணி டைம் ஸ்லாட்டை எதிர்நீச்சலுக்கு கொடுத்தது சன் டிவி. ஆனால், உச்சத்துக்கொண்டு போன சீரியலை ஒரே வாரத்தில் முடிவுக்கும் கொண்டுவந்துவிட்டது சன் டிவி. ஆயிரம் எபிசோடிகளைத் தாண்டும் என எதிர்பார்க்கப்பட்ட ‘எதிர் நீச்சல்' சீரியலை முடிக்கும் முடிவை சன் டிவி ஒரே நாளில் எடுத்துவிடவில்லை. கடந்த சில மாதங்களாகவே எதிர் நீச்சல் கதையின் போக்கு கண்டபடி அலைபாய ஆரம்பிக்கும்போதே சன் டிவி அபாயமணியை அலறவிட ஆரம்பித்துவிட்டது.
வீழ்ச்சிக்கான காரணங்கள்! எதிர்நீச்சல் சீரியலின் வீழ்ச்சிக்கு காரணம் மாரிமுத்துவின் மரணமோ, கலாநிதி மாறனோ அல்ல. இயக்குநர் திருச்செல்வம் மிக முக்கியமானக் காரணம். ‘எதிர் நீச்சல்' சீரியலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததும் நடிகராகவும் சீரியலுக்குள் நுழைந்தார் திருச்செல்வம். இவருடைய ஜீவானந்தம் என்கிற கேரெக்டருக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதோடு, இவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் அதிகம் இடம்பெற ஆரம்பித்ததும், இவருக்கும் குணசேகரனின் மனைவி ஈஸ்வரிக்கும் இடையேயான காட்சிகள் பெண்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியதும் எதிர்நீச்சலின் டிஆர்பி தடம்புரள மிக முக்கியக் காரணம்.
ஓவர் பெண்ணியம்!
இரண்டாவது மிக முக்கியமானக் காரணம் ஓவர் பெண்ணியம். பெண்களே வெறுக்கும் அளவுக்கு சீரியலில் அதீத ஃபெமினிச காட்சிகள் இடம்பெற்றது. தமிழ்நாட்டில் விவாகரத்துகள் அதிகம் நடந்தாலும் தொலைக்காட்சி கதைகளில் விவாகரத்துகளை பார்க்கும் பெண்கள் ரசிக்கமாட்டார்கள். குணசேகரன் கேரெக்டர் திருந்துவதே கதை என்பது மாறி ஈஸ்வரி விவாகரத்து கேட்டு வீட்டைவிட்டு வெளியேறும் கதையாக மாறியது பார்வையாளர்களின் ஆர்வத்தைக் குறைத்தது.
வில்லனா, கதையின் நாயகனா?
மாரிமுத்து இருக்கும்வரை அந்தக் கதாபாத்திரம் ஆணாதிக்கத்தின் அடையாளமாக மட்டுமே இருந்தது. ஆனால் மாரிமுத்துவின் இறப்புக்குப்பிறகு வேல ராமமூர்த்தி குணசேகரனாக நடிக்க ஆரம்பித்தப்பிறகு அந்தக் கதாபாத்திரம் வழக்கமான சீரியல் வில்லன் கதாபாத்திரத்தை நோக்கி நகர்ந்தது. கதையாக கோட்டைவிடப்பட்ட மிக முக்கியமான தருணம் இது.
ஹீரோயின் எங்கே?
எதிர் நீச்சல் சீரியலின் கதாநாயகி ஜனனி. ஆனால், அவருக்கான காட்சிகள் குறைக்கப்பட்டு எந்த நேரமும் சண்டை, சச்சரவு என பயணிக்க ஆரம்பித்து முடிவை தேடிக்கொண்டது எதிர் நீச்சல். படித்த, லட்சியப் பெண்களுக்கும், அவர்களின் பிற்போக்குத்தனமான, கட்டுப்படுத்தும் கணவன்மார்களுக்கும் இடையேயான போராட்டமே கதை என்கிற நேர்க்கோட்டில் இருந்து விலகிப்போனதே எதிர்நீச்சல் சீரியல் முடிவுக்கு வரக்காரணம்.
ஒரு தொலைக்காட்சித் தொடருக்கான கதையை எப்படி ஆரம்பிக்கவேண்டும் என்பதற்கும், வெற்றிபெற்றதற்குப்பிறகு எப்படி கதையைக் கொண்டுபோகக்கூடாது என்பதற்கும் சரியான உதாரணமாக ஒளிபரப்பாகிவிட்டுப்போயிருக்கிறது ‘எதிர் நீச்சல்’.