Siragadikka Aasai : பாட்டியின் ஸ்பெஷல் பரிசை வாங்கிய மீனா,முத்து...ப்ளேட்டை திருப்பிப்போட்ட விஜயா!
பாட்டிக்கு எல்லோரது கிஃப்ட்டும் பிடித்திருந்தாலும் கடைசியில் பரிசை அவரது மனதைத் தொட்டவர்களுக்கு கொடுக்கிறார்.
பாட்டியின் பரிசை பத்திரப்படுத்துகிறார்கள் முத்துவும், மீனாவும்!
பாட்டி போனதும் கவரிங் நகை பஞ்சாயத்தைக் கூட்டுகிறான் முத்து.
பாராட்டி தள்ளிய குடும்பம்!
பாட்டி பேசிய வீடியோவை பார்த்து எல்லோரும் கைதட்டி மீனாவை பாராட்டுகின்றனர். இதைப் பார்த்து விஜயா, ரோகிணி, மனோஜ் ஆகியோர் கடுப்பாகி நிற்க, அண்ணாமலை ‘’நீங்க சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் உங்க வாழ்க்கையோட அனுபவம்... இத பாத்தா குடும்பத்துல பிரச்சனை உண்டு பண்ணணும்னு நினைக்கிறவங்க கூட கூட மனசு மாறிடுவாங்க’’ என்று விஜயாவை பார்த்தபடி சொல்கிறார். ‘’சுருதி இந்த வீடியோவை எனக்கு அனுப்பி வைங்க மீனா… நான் அடிக்கடி பாத்துக்குறேன்… என்னுடைய பிரண்ட்ஸ்க்கும் ஃபார்வேர்ட் பண்ணுறேன்’’ என்கிறாள்.
ரவியை பாராட்டிய பாட்டி!
அடுத்ததாக பாட்டியின் தோழிகள் கேக்கு ரொம்ப நல்லா இருந்துச்சு என்று சொல்ல நாச்சியார் பாட்டி ‘’என் பேரன் ரவி அவன் கையால செஞ்சது. அந்த கேக்குக்கு கூட என்னோட பேர் தான் வச்சிருக்கான்’’ என்று சொல்லி சந்தோஷப்பட இதை பார்த்த மனோஜ் ‘என்ன ரவியை ரொம்ப பாராட்டுறாங்க… ஸ்பெஷல் கிஃப்ட் அவனுக்கு கொடுத்து விடுவாங்களோ’ என்று பதறுகிறான்.
பொறுமை இழந்த மனோஜ்!
மனோஜ் இனிமேலும் பொறுமையாக இருக்க முடியாது என்று சொல்லி பாட்டியிடம் ‘’பாட்டி நீங்க ஏதோ ஸ்பெஷல் கிஃப்ட் கொடுக்கிறதா சொல்லியிருந்தீங்க.. அது யாருக்கு… என்ன கிஃப்ட்?’’ என்று கேட்கிறான். நாச்சியார் பாட்டி விஜயாவை கூப்பிட்டு ‘’போய் என்னுடைய பேகை எடுத்துட்டு வா’’ என்று சொல்கிறார். பைக்குள் இருந்து பரம்பரை நகை ஒன்றை வெளியே எடுக்கும் பாட்டி ‘’இது நம்ம குடும்பத்தோட பரம்பரை நகை… நாலு தலைமுறையா நம்மகிட்ட இருக்கு.. இதை சரியான ஆள் கிட்ட சேர்க்கணும்னு நெனச்சேன்’’ என்று சொல்ல விஜயா சந்தோஷப்படுகிறாள்.
புஸ்வானமான விஜயாவின் சந்தோஷம்!
பிறகு பாட்டி ‘’விஜயா எனக்காக பெரிய டிவி வாங்கி கொடுத்திருக்கா… இனிமே நான் அந்த டிவில தான் படம், சீரியல் எல்லாமே பார்ப்பேன். ஊர்ல எல்லார்கிட்டயும் என் மருமகள் வாங்கி கொடுத்ததுன்னு பெருமையா சொல்லுவேன். உனக்கு கண்டிப்பா நான் ஏதாச்சு செய்வேன்’’ என்று சொல்ல ஸ்பெஷல் கிஃப்ட் தனக்கில்லை என்பது உறுதியானதும் விஜயா முகம் டல்லாகிறது.
மனோஜ், ரோகிணிக்கு பல்பு!
‘’மனோஜ் எனக்காக நவரத்தின மாலை வாங்கி கொடுத்திருக்கான்… அது எனக்கு ரொம்ப நிறைவா இருக்கு’’ என்று சொன்னதும் ‘’அப்போ ஸ்பெஷல் கிஃப்ட் எனக்குத்தானா’’ என்று மனோஜ் சந்தோஷப்பட அண்ணாமலை ‘’கொஞ்சம் பொறுமையா இருடா அவங்களே சொல்லுவாங்க’’ என்று சொல்கிறார். ‘’ரோகிணி என்னை பளபளன்னு ஆக்கிட்டா.. ரவி எனக்காக கேக் செஞ்சான், ஸ்ருதி போன் வாங்கி கொடுத்திருக்கிறா.. இது எல்லாமே எனக்கு மனசுக்கு நிறைவான கிஃப்ட்தான்’’ என்று சொல்கிறார் பாட்டி.
‘’இது எல்லாத்தையும்விட முத்து நான் யாரை பாக்கணும்னு ஏங்கிட்டு இருந்தேனோ அவங்களை கூட்டிட்டு வந்து என்னுடைய சந்தோஷத்தை திருப்பி கொடுத்துட்டான்’’ என்று சொல்கிறார். அதேபோல் மீனா ‘’என்னுடைய வாழ்க்கை அனுபவத்தை ஒரு வீடியோவா எடுத்து உங்க எல்லாருக்கும் போட்டு காட்டுனா... என்னுடைய நினைவுகளை அவ அப்படியே படம் பிடிச்சி இருக்கா.. இவங்க ரெண்டு பேர் கொடுத்த கிஃப்ட்டும் எனக்கு உணர்வுபூர்வமாக இருந்தது’’ என்று சொல்கிறார்.
பரிசை தட்டிச் சென்ற முத்து, மீனா!
அதனால என்னுடைய இந்த ஸ்பெஷல் கிஃப்ட் முத்து மீனாவுக்கு தான் என்று சொன்னதும் விஜயா மனோஜ் ரோகிணி ஆகியோர் கடுப்பாக மற்றவர்கள் கைதட்டி சந்தோஷப்படுகின்றனர். அண்ணாமலை ‘’சரியான ஆளைத்தான் தேர்வு செஞ்சிருக்கீங்க’’ என்று பாராட்டுகிறார்.
கண்டிஷனுடன் பரிசை கொடுத்த பாட்டி!
பாட்டி ‘’இந்த நகையை தினமும் பூஜை அறையில வெச்சி பூஜை பண்ணனும்… வருஷத்துக்கு ஒரு முறை குலதெய்வக் கோயிலுக்கு கொண்டு போய் பூஜை செஞ்சிட்டு வரணும். எக்காரணத்தைக் கொண்டும் இந்த நகை இந்த குடும்பத்தை விட்டு வெளியே போகக்கூடாது என கண்டிஷன் மேல் கண்டிஷன் போட்டு நகையை கொடுக்கிறார்.
மீனா சொன்ன வார்த்தை!
உங்க கௌரவத்துக்கு முன்னாடி எதுவுமே பெருசு இல்ல… நிச்சயமா இந்த நகையை நாங்க பத்திரமாக பார்த்துக்குவோம் என்று பாட்டியின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக் கொள்கின்றனர் முத்து, மீனா. அதன் பிறகு மீனா அந்த நகையை பீரோவில் வைப்பதற்காக பார்த்துக் கொண்டிருக்க உள்ளே வந்த முத்து ‘’பாட்டி சாப்பிட கூப்பிடுறாங்க’’ என்று சொல்ல மீனா ‘’இந்த நகையை பத்திரமா பாத்துக்கணும்’’ என்று சொல்கிறாள். ‘’இந்த கிஃப்ட் நமக்கு கிடைக்க நீங்கதான் காரணம்’’ என்று மீனா சொல்ல முத்து ‘’நீதான் காரணம்’’ என்று சொல்கிறான். அதன் பிறகு ‘’கவரிங் நகை பிரச்சனை பற்றி எதுவும் பேச வேண்டாம்’’ என்று மீனா சொல்ல ‘’நீ சொன்னதுக்காகத்தான் நான் இதுவரைக்கும் அமைதியா இருக்கேன்… நாளைக்கு பாட்டி ஊருக்கு கிளம்பிடுவாங்க… அதுக்கப்புறம் பஞ்சாயத்தை வச்சுக்கிறேன்’’ என்று கோபப்படுகிறான்.
ஊருக்கு கிளம்பிய பாட்டி, பஞ்சாயத்தை கூட்டிய முத்து!
பாட்டி ஊருக்கு கிளம்பியதும் முத்து வீட்டுக்கு வந்து கடைக்கு கிளம்பிய மனோஜ் ரோகிணியை தடுத்து நிறுத்தி கதவை சாத்தி தாழ்ப்பால் போட்டு எல்லோரையும் கூப்பிடுகிறான். பிறகு மீனா ‘’அதை எடுத்துட்டு வா’’ என்று சொன்னதும் மீனா அந்த நகையை கொண்டு வந்து கொடுக்க ‘’இது எல்லாத்தையும் கொடுத்துட்டு பாட்டுக்கு ஒரு செயின் வாங்குறதுக்காக தான் இந்த நகையை வாங்கி இருந்தோம்’’ என்று சொல்ல சுருதி ‘’அப்போ நீங்க ஏன் பாட்டிக்கு செயின் கொடுக்கவே இல்லை’’ என்று கேட்கிறாள். உடனே முத்து ‘’அங்கதான் பஞ்சாயத்து இருக்கு… கடைக்கு இந்த நகையை கொண்டு போய் கொடுத்தப்போ இது எல்லாமே கவரிங் நகைன்னு சொல்லிட்டாங்க’’ என்று சொன்னதும் எல்லோரும் ஷாக்காகின்றனர்.
அண்ணாமலை கேட்ட கேள்வி!
‘’கல்யாணத்துக்கு போட்ட இந்த நகை எல்லாம் எப்படி கவரிங் நகையா மாறுச்சு… எனக்கு இப்போ தெரிஞ்சாகணும்.. நீங்க சொன்ன மாதிரி நான் பொறுமையா கோவப்படாம எல்லாரையும் கூப்பிட்டு வச்சு தான் இந்த விஷயத்தை கேட்கிறேன்… இந்த குடும்பத்தோட நீதிபதி நீ தானே… அப்பா நீயே இதை விசாரிச்சு சொல்லு’’ என்று சொல்கிறான்.
அதன் பிறகு அண்ணாமலை விஜயாவிடம் ‘’நகை எல்லாம் உன் கிட்ட தானே இருந்தது.. எப்படி இது மாறுச்சு’’ என்று கேள்வி கேட்க ‘’என்கிட்ட கேக்குறீங்க… அன்னைக்கி நகையை கழட்டி கொடுத்தாங்க.. வாங்கி பீரோல வச்சேன், திருப்பி கேட்டாங்க எடுத்துட்டு வந்து கொடுத்துட்டேன்.. இவங்க கொடுக்கும் போதே கவரிங் நகை தான் கொடுத்தாங்களோ என்னவோ’’ எனப் ப்ளேட்டை திருப்பி விட்டு அதிர்ச்சி கொடுக்கிறாள். இது எல்லாமே கவரிங் நகையா? அப்போ தங்கம் கிடையாதா? என்று ஒன்றும் தெரியாதது போல கேள்வி கேட்கிறாள்.
விஜயாவின் வேஷம் கலையுமா?!