அய்யோ கோபி நிலைமை இப்படி ஆகிப்போச்சே… பாக்யா ஒரு பக்கம், ராதிகா மறுபக்கம்! ‘பாக்கியலட்சுமி’ ஹைலைட்ஸ்
போதையில் வந்த கோபி!
கோபி போதையில் வீட்டுக்கு வந்து மயூவுடன் பேச ராதிகா மயூவை உள்ள போ என அனுப்பி வைக்கிறாள். அதன் பிறகு கோபியை பார்த்து ‘’குடிச்சிட்டு வந்திருக்கீங்களா’’ என்று கேட்க கோபி ‘’மனசுக்கு கஷ்டமா இருந்துச்சு… அதான் குடிச்சிட்டு வந்திருக்கேன்’’ என்று சொல்கிறான்.
‘’உங்களுக்கு மட்டும் தான் மனசு கஷ்டமா இருக்குமா… எனக்கு கூடத்தான் மனசு கஷ்டமா இருக்கு.. போய் குடிச்சிட்டு வரவா?’’ என்று ராதிகா கேட்க ‘’என் அம்மா என்னை விட்டு போயிட்டாங்க’’ என்று கோபி புலம்ப ‘’உங்க அம்மாவால என் குழந்தை இந்த உலகத்தையே பாக்காம போயிடுச்சு… அதெல்லாம் உங்களுக்கு கவலை இல்லை… உங்க அம்மா உங்களை விட்டுப் போனதுதான் கவலையா இருக்கா’’ என்று ராதிகா கோபியை கேள்வி மேல் கேள்வி கேட்கிறாள்.
உங்க அம்மா கூடவே போய்டுங்க!
‘’என் அம்மா அப்படி பண்ண மாட்டாங்க’’ என்று கோபி சொல்ல ராதிகா ‘’போதும் நிறுத்துங்க... உங்க அம்மா இல்லாம இருக்கிறது ரொம்ப கஷ்டமா இருக்குனா நீங்களும் அங்கேயே போயிடுங்க. என் வாழ்க்கையை என்னால தனியாவே பார்த்துக்க முடியும்’’ என கோபத்தில் கொந்தளிக்கிறாள்.
சாபம் விட்ட ராமமூர்த்தி!
அடுத்த நாள் காலையில் ராமமூர்த்தி மற்றும் பாக்யா இருவரும் வாக்கிங் வர ராமமூர்த்தி ஈஸ்வரியை நினைத்து கவலைப்பட்டு பேசிக்கொண்டு வர எதிரே கோபி வந்து நிற்க அவனைப் பார்த்ததும் ராமமூர்த்தி கடும் கோபம் கொள்கிறார். ‘’டேய் நில்லுடா’’ என கோபியின் சட்டையை பிடித்து ‘’உன்னையே நம்பிக்கிட்டு இருந்த உன் அம்மாவுக்கு நீ கொலைகாரி பட்டம் கட்டி வீட்டை விட்டு வெளியே அனுப்பிட்ட… அவ உடைஞ்சி போய் இருக்கா.. உன்னால ஒருத்தருக்காவது நிம்மதியை கொடுக்க முடிஞ்சதா? முதல்ல என்னைப் படுக்க வச்ச, இப்போ உன் அம்மாவ படுக்க வச்சுட்ட.. எந்த ஒரு அப்பா அம்மாவும் புள்ள நல்லா இருக்கக் கூடாதுன்னு நினைக்க மாட்டாங்க… எந்த புள்ளையும் அம்மா அப்பா நல்லா இருக்கக்கூடாதுன்னு நினைக்க மாட்டாங்க. ஆனா இப்போ மன வேதனையோட சொல்றேன் நீ நல்லாவே இருக்க மாட்ட… ஒரு நாள் யாருமே இல்லாம தனிமரமா நிப்ப’’ என்று சாபம் விடுகிறார்.
கும்பகோணம் கிளம்பிய குடும்பம்!
அடுத்ததாக பாக்யா, கும்பகோணம் கிளம்ப ஏற்பாடு செய்ய வண்டியும் வந்துவிட ‘’ஈஸ்வரி நான் வரல’’ என்று சொல்கிறாள். மொத்த குடும்பமும் ஈஸ்வரியை சம்மதிக்க வைத்து கும்பகோணம் கிளம்பி செல்கின்றனர். இவர்கள் காரில் செல்வதை பார்த்த கோபி அம்மாவ எங்க கூட்டிட்டு போறாங்க என்று குழப்பம் அடைகிறான்.
கோபப்பட்ட எழில், பதில் சொன்ன செழியன்!
ஈஸ்வரியை கூட்டிக்கொண்டு கும்பகோணம் கிளம்பியதும் எழில், செழியன் இருவரும் வெளியில் நின்று கொண்டிருக்க கோபி ஓடிவந்து ‘’அம்மாவை எங்கே கூட்டிட்டு போறாங்க’’ என்று கேள்வி கேட்க எழில் ‘’அதை பத்தி உங்களுக்கு என்ன கவலை? அவங்களை தான் வீட்டை விட்டு வெளியே அனுப்பிட்டிங்களே.. அதுக்கு அப்புறம் எதுக்கு தேவையில்லாத விஷயத்துல மூக்க நுழைக்கிறீங்க’’ என்று கோபப்படுகிறான்.
‘’எல்லாரும் பாக்குறாங்க நீ உள்ள போடா’’ என்று செழியன் எழிலை அனுப்பி வைத்துவிட்டு கோபியிடம் ‘’அவங்க கும்பகோணம் போறாங்க’’ என்று சொல்ல கோபி ‘’அம்மா ஏற்கனவே உடம்பு முடியாம இருக்காங்க… அவங்கள எதுக்கு வெளியே கூட்டிட்டு போகணும்’’ என்று கோபப்பட செழியன் ‘’இங்கேயே உட்கார்ந்து நீங்க பண்ணதையே நெனச்சு நெனச்சு அழுதுட்டு இருக்க சொல்றீங்களா’’ என்று பதிலடி கொடுக்கிறான். ‘’நீங்க கேட்டதுக்கு பதில் சொல்லியாச்சு கிளம்புங்க… என்னையும் எழிலை மாதிரி பேச வச்சிடாதீங்க’’ என்று துரத்தி விடுகிறான்.
கோபிக்கு மீண்டும் காத்திருந்த அதிர்ச்சி!
கோபி வீட்டுக்கு வர ராதிகா கேப் டிரைவருக்கு போன் செய்து ‘’எவ்ளோ நேரம் ஆகும்’’ என விசாரித்துக் கொண்டிருக்க, கோபி ‘’எங்க போற ஆபீஸ்க்கு கிளம்பிட்டியா? எதுக்கு அதுக்குள்ள ஆபீஸ்க்கு போற? ரெண்டு நாள் ரெஸ்ட் எடு’’ என்று சொல்ல ராதிகா எதையும் கண்டு கொள்ளாமல் ‘’அம்மா, மயூ ரெண்டு பேரும் ரெடியா’’ என்று கேட்க ‘’மூணு பேரும் கிளம்பி எங்க போறீங்க’’ என்று கோபி மறுபடியும் கேட்கிறான்.
‘’நாங்க எங்க போனா உங்களுக்கு என்ன ரொம்ப தான் அக்கறை’’ என்று ராதிகா கோபியின் மேல் எரிந்து விழுகிறாள்.
குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி கொள்வதென்பதேது!