ஒற்றை செங்கலால் பெரிய ரூமே கட்டிய முத்து, மீனா… மனோஜின் பேராசை ஆபத்து! ‘சிறகடிக்க ஆசை’ ஹைலைட்ஸ்
ஒற்றை செங்கல்லைக்கொண்டு முத்துவும், மீனாவும் வார்த்தைகளாலேயே வீடுகட்டுகிறார்கள்.
4 லட்சம் ரூபாய் கொடுத்து மனோஜ் கடையில் பொருள் வாங்குபவர்கள் பில் வேண்டாம் என்கிறார்கள்.
ஸ்ருதி ரவியிடம் தனக்கு நெயில் பாலிஷ் போட்டுவிடச்சொல்ல, இதைப்பார்த்த விஜயா காண்டாகிறாள்.
மாடிக்கு செங்கல் எடுத்துக்கொண்டு போன முத்துவும் மீனாவும் கற்பனையில் ரூமை கட்டி முடிக்கின்றனர். இங்க கட்டில், அங்க ஒரு சின்ன கபோர்டு, ஒரு பீரோ, இங்க ஒரு சின்னதா டேபிள் அதுல வெச்சி நான் பூ கட்டிக்கிறேன் என்று ஆளாளுக்கு ஒவ்வொன்றை சொல்லி மொத்தமாக கற்பனையில் ரூமை கட்டி முடித்து வலது காலை எடுத்து வைத்து உள்ளே வருகின்றனர்.
அதன் பிறகு மீனா ‘’இந்த ரூம் நமக்கு இல்லன்னு யாரும் சொல்ல முடியாதுல’’ என்று கேட்க முத்து ‘’அதெப்படி சொல்ல முடியும்? இது நம்ம ரூம்’’ என்று பதில் சொல்கிறான்.
மனோஜின் பேராசை!
அடுத்ததாக மனோஜ் கடையில் இருக்க போனில் பேசிய இருவர் அவரது கடைக்கு வருகின்றனர். ‘’நேத்து நாங்க தான் உங்ககிட்ட பேசுனோம் அந்த அஞ்சு ஃப்ரிட்ஜ், 5 வாஷிங் மெஷின், 5 ஏசி, 5 டிவி வேணும்னு கேட்டிருந்தோம்’’ என்று சொல்ல மனோஜ் ‘’உங்களுக்காக தான் சார் காத்துட்டு இருக்கேன்… எங்க கடையில யாரும் ஒரே நாள்ல இவ்வளவு பொருள் வாங்குனது இல்லை… வாங்க’’ என்று அழைத்துச் சென்று பொருட்களை காட்ட அவர்களும் ‘’இது நல்லா இருக்கு எல்லாமே உடனே டெலிவரி கிடைச்சிருமா’’ என்று கேட்க மனோஜ் ‘’இப்பவே டெலிவரி பண்ணிடலாம்… எல்லாமே ஸ்டாக் இருக்கு’’ என்று சொல்கிறான்.
அதன் பிறகு ‘’பில்லு போட்டு விடலாமா’’ மனோஜ் என்று கேட்டு கவுன்ட்டருக்கு வர அவர்கள் ‘’பில் எல்லாம் வேண்டாம், நாங்க பிசினஸ்தான் பண்றோம்…இது கணக்குல வராத பணம். நீங்க பில்லு போட்டா நாங்க வரி கட்ட வேண்டியது இருக்கும். அதனால பில்லு இல்லாம கொடுங்க எல்லாத்தையும் இப்பவே வாங்கிக்கிறோம் இல்லனா நாங்க வேற கடையை பார்த்துட்டு போயிட்டே இருக்கோம்’’ என்று சொல்ல மனோஜ் ‘’என்கிட்ட இவ்வளவு பொருள் வாங்கறீங்க… உங்களுக்காக இதைக் கூட செய்ய மாட்டேனா’’ என்று சொல்லி பில் போட்டு தராமல் அவர்கள் கொடுக்கும் கருப்பு பணத்தை வாங்கிக் கொள்கிறான். அதோடு அவர்கள் ‘’வண்டியும் நாங்களே எடுத்துட்டு வந்துட்டோம்… அதுல ஏத்திட்டீங்கன்னா கொண்டு போய் விடுறோம்’’ என்று சொல்ல மனோஜ் ‘’சூப்பர் சார்’’ என்று பொருட்களை ஏற்றி அனுப்புகிறான்.
ஸ்ருதியின் நெயில் பாலிஷ்!
ரவி கேம் விளையாடிக் கொண்டிருக்க லேட்டாக வீட்டுக்கு வரும் ஸ்ருதி ‘’ரொம்ப நேரம் நின்னு பேசுனதுல கால் வலிக்குது’’ என்று சொல்லி ரவியை கால் அமுக்கி விட சொல்ல அவன் கதவை சாத்தப் போகிறான். ஸ்ருதி ‘’எதுக்கு கதவ சாத்துற… நாம என்ன கள்ள தொடர்புலயா இருக்கோம்… ஹஸ்பண்ட் அண்ட் வைஃப்தானே… யார் என்ன சொல்லப் போறாங்க’’ என்று சொல்லி அமுக்கி விட சொல்ல ரவியும் கால் அமுக்க தொடங்க விஜயா இதை பார்த்து அதிர்ச்சி அடைகிறாள். ஸ்ருதி ரவியிடம் ‘’இன்னிக்கு டப்பிங் பேசும்போது ஒரு பொண்ணுக்கு அவ புருஷன் நெய்ல் பாலிஷ் போட்டு விடுற மாதிரி பேசுனேன். அதுல ஏதோ ஒரு தனி ஃபீல் இருக்கிறதா சொன்னாங்க, அது என்னன்னு பாக்கணும் எனக்கு நெய்ல் பாலிஷ் போட்டு விடு’’ என்று சொல்ல ரவியும் போட்டுவிட உள்ளே வந்த விஜயா ‘’டேய் ரவி என்னடா இதெல்லாம்… ஏம்மா இதெல்லாம் நீயே அடிச்சுக்க கூடாதா? புருஷன் மேல கால வச்சுட்டு இருக்க.. நாலு பேரு பார்த்தா’’ என்ன சொல்லுவாங்க என்று கேட்கிறாள்.
பல்பு கொடுத்த ஸ்ருதி!
‘’யார் என்ன சொல்ல போறாங்க அத்த… புருஷன் பொண்டாட்டிதானே நாங்க’’ என்று பதில் சொல்கிறாள். ‘’இந்த மாதிரி புருஷன் பொண்டாட்டிக்கு நெய்ல் பாலிஷ் போட்டு விடுறதுல ஒரு தனி சுகம் இருக்கு. நான் சொன்னா உங்களுக்கு புரியாது… வேணும்னா நீங்களே முயற்சி பண்ணி பாருங்க’’ என்று நெயில் பாலிஷை கொடுத்து ‘’அங்கிளை உங்களுக்கு போட்டு விடச் சொல்லுங்க’’ என்று சொல்லி அனுப்புகிறாள்.
அண்ணாமலையிடம் வந்த பஞ்சாயத்து!
இதைக் கேட்டு விஜயா நேராக அண்ணாமலையிடம் வந்து ‘’இந்த ஸ்ருதி பொண்ணு பண்றது எதுவுமே சரியில்ல... அவங்க அம்மா என்ன வளர்த்து வெச்சிருக்காங்க… ரவிய வாடா போடான்னு சொல்றது இல்லாம அவனை கால் அமுக்கி விட சொல்லி படாத பாடு படுத்துறா... நெயில் பாலிஷ் போட்டு விட சொல்றா… நீங்க வந்து என்னன்னு கேளுங்க… அவகிட்ட என்னால பேச முடியல, அவ பேசுறதை கேட்கவும் முடியவில்லை. அவ நடந்துக்கிறதை பார்க்கவும் முடியல’’ என்று புலம்புகிறாள்.
அண்ணாமலை கொடுத்த பதில்!
‘’நீ எதுக்கு அவங்க விஷயத்துல தலையிடுற? அவங்க புருஷன், பொண்டாட்டி அன்னோன்யமா இருக்காங்க… இருந்துட்டு போகட்டும், காலம் மாறிப்போச்சு காலத்துக்கு ஏத்த மாதிரி நாம தான் மாறிக்கணும்’’ என்று சொல்கிறார். விஜயா புலம்பலை கேட்ட அண்ணாமலை ‘’ஒரு நிமிஷம் இரு... இது எல்லாத்துக்கும் ஒரு வழி இருக்கு’’ என்று சொல்லி பணத்தை எடுத்து பாக்கெட்டில் வைத்துக் கொண்டு வெளியே கிளம்புகிறார்.
அண்ணாமலை வாங்கப்போவது என்னவோ?!