கவரிங்கை மீனாவுக்கு கொடுக்கும் விஜயா… முத்துவுக்குத் தெரியப்போகும் உண்மை!- ‘சிறகடிக்க ஆசை’ ஹைலைட்ஸ்!
விஜயா மனோஜிடம் கொடுத்த மீனாவின் நகையைக் கேட்க, அதை விற்றுவிட்டதாக அதிர்ச்சி கொடுக்கிறான் மனோஜ்.
அந்த நகையைப் போலவே கவரிங் நகைகளை வாங்கிக்கொண்டு போய் விஜயா மீனாவிடம் கொடுக்கிறாள்
கவரிங் நகையை மீனாவும், முத்துவும் எடுத்துக்கொண்டு நகைக் கடைக்குபோகிறார்கள்!
2 மணி நேர ஸ்பெஷல்!
நேற்று(30-06-2024) ஞாயிற்றுக்கிழமை சிறகடிக்க ஆசை சீரியலின் 2 மணி நேர ஸ்பெஷல் எபிசோட் ஒளிபரப்பானது. ஸ்பெஷல் எபிசோட்டில் மனோஜ் நகையை அடகு வைக்காமல் விற்று விட முத்து, மீனா அண்ணாமலையிடம் நகைப்பற்றி கேட்க மனோஜ் நகை பற்றிய உண்மையை விஜயாவிடம் சொல்கிறான். விஜயாவுக்கு நகையை விற்றுவிட்டதாக அதிர்ச்சி கொடுக்கிறான். இந்நிலையில் இன்று நடக்கப்போவது என்ன?!
கை விரித்த கடைக்காரர்!
‘’நான் என்னுடைய நகையை தரேன், நீ அந்த நகையை திருப்பி வாங்கிட்டு வா’’ என்று சொல்ல மனோஜ் ‘’சரி மா’’ என்று கடைகாரருக்கு போன் போட்டு நகை குறித்து கேட்க அவர் ‘’அடகு வைக்கிற நகைதான் அப்படியே இருக்கும். விற்ற நகையெல்லாம் டெட் பாடி மாதிரி... அதை அப்படியே வச்சிட்டு இருக்க மாட்டோம், உருக்கிடுவோம்.. நீங்க வித்துட்டு போன நகை எல்லாம் உருக்கியாச்சு… வேணும்னா தங்க கட்டி தான் இருக்கும்’’ என்று சொல்ல மனோஜ் ‘’அத வெச்சி நான் என்ன பண்றது’’ என்று சொல்லி போனை வைக்கிறான்.
அடுத்த இடியை இறக்கிய மனோஜ்!
மனோஜ் வீட்டுக்குள் வர விஜயா ‘’அந்த நகையை வாங்கிட்டு வந்துட்டியா… வா போலாம்’’ என்று சொல்ல ‘’இல்லமா அந்த நகை கிடைக்காது… அதை உருக்கிட்டாங்களாம்’’ என்று சொல்ல விஜயா ‘’உருக்கிட்டாங்களா’’ என்று அதிர்ந்துபோய் உட்காருகிறாள். மனோஜை கூப்பிட்டு பளாரென கன்னத்தில் ஒரு அறை விடுகிறாள். ‘’அந்த நகை எப்படி இருக்கும்னு கூட நான் பார்த்தது கிடையாது. பார்த்திருந்தா அதே மாதிரி வாங்கி வெச்சிருதிருப்பேன்’’ என்று சொல்ல மனோஜ் ‘’நான் அந்த நகையெல்லாம் போட்டோ எடுத்து வச்சிருக்கேன்’’ என்று சொல்கிறான்.
பார்வதி ‘’அப்புறம் என்ன அதே மாதிரி தங்க நகைகளை வாங்கிடுங்க’’ என்று சொல்ல விஜயா ‘’தங்க நகையா எதுக்கு? கவரிங் நகையே போதும். எங்கேயாவது பங்க்ஷனுக்கு போறதுக்கு தானே கேப்பா… அவளுக்கு அதுவே போதும்’’ என்று சொல்லி கவரிங் நகையை வாங்குகின்றனர்.
முத்துவிடம் மாட்டிய தலைமுடி!
வீட்டில் முத்து, மீனா, ரோகிணி, ஸ்ருதி, அண்ணாமலை ஆகியோர் சாப்பிட்டு கொண்டு இருக்க முத்துவுக்கு சாப்பாட்டில் ஒரு தலை முடி சிக்க அது யாருடைய முடி என ஆராய்ச்சி செய்கிறான். மீனா ‘’ஏங்க என்னுடைய முடி தான் தூக்கி போட்டு சாப்பிடுங்க’’ என்று சொல்வதோடு ‘’இந்த மாதிரி முடி கிடைச்சா உறவு நீடிக்கும்’’ என்று சொல்கிறாள். முத்து ‘’ஆனா எனக்கு வேற மாதிரி தான் சொல்லி இருக்காங்க… பெருசா பிரச்சனை வரும்னு சொன்னாங்களே’’ என்று சொல்கிறான்.
கவரிங் நகையுடன் வந்த விஜயா!
சாப்பிட்டு முடித்த பிறகும் முத்து அந்த முடியை வைத்து ஆராய்ச்சி செய்து கொண்டிருக்க மனோஜ் மற்றும் விஜயா வீட்டுக்கு வருகின்றனர். விஜயா உள்ளே போக அண்ணாமலை அவளை கூப்பிட்டு ‘’மீனா கொடுத்த நகையை எடுத்துட்டு வந்து கொடு’’ என்று சொல்கிறார். ரோகிணி ‘’அந்த நகையை தான் போட மாட்டேனு சபதம் போட்டீங்களே... ஏன் அந்த சபதத்தை வாபஸ் வாங்க போறீங்களா’’ என்று கேட்க முத்து மீனாவுக்கு ‘’என் பாட்டி போட்ட நகையைத்தானே கேட்குறோம். என்னமோ மலேசியாவில் இருந்து உங்க அப்பா அனுப்பின நகையை கேக்குற மாதிரி பேசுறீங்க'’ என்று பதிலடி கொடுக்கிறான்.
விஜயா ‘’ரோகிணி அப்பா அனுப்புனா லாரி லாரியா அனுப்புவார்’’ என்று பில்டப் கொடுக்க ‘’ஜெயில்ல இருக்கிறாரு.. அங்கு இருந்து கல்லை ஒடச்சு தான் அனுப்பனும்’’ என்று பதிலடி கொடுக்கிறான் முத்து!
முத்து கேட்ட கேள்வி!
விஜயா ‘’ஆமா உன்னுடைய சபதம்லாம் என்ன ஆச்சு? அவன் தான் போதையில அப்பப்போ ஏதாவது ஒன்னு பேசுவான். உனக்காவது கொஞ்சம் ரோஷம் இருக்குன்னு நினைச்சேன் அதுவும் இல்ல போல’’ என்று நக்கலாக பேச முத்து ‘’இப்ப அந்த நகை இருக்கா இல்லையா’’ என்று கேட்டு அதிர்ச்சி கொடுக்கிறான்.
நகையை கொண்டு வந்து கொடுத்த விஜயா!
‘’அந்த நகையை வெச்சிட்டு நான் என்ன பண்ண போறேன்’’ என்று சொல்லி விஜயா ரூமுக்கு சென்று நகையை கொண்டு வந்து கொடுக்கிறாள். மீனா நகையைத் திறந்து திருப்பி திருப்பி பார்க்க விஜயா ‘’நான் ஒன்னும் உன் நகையை எதுவும் பண்ணல’’ என்று சொல்ல மீனா ‘’நான் எதுவும் சொல்லலையே’’ என்று பதில் சொல்கிறாள்.
நகை வாங்க கிளம்பிய முத்து!
விஜயாவிடமிருந்து நகையை வாங்கியதும் முத்து மீனா கடைக்கு கிளம்ப ‘’நகையை எடுத்துட்டு எங்க போறீங்க’’ என்று விஜயா கேட்க அண்ணாமலை ‘’அவங்க எங்கேயோ போறாங்க உனக்கு என்ன?’’ என்று கேட்க விஜயா ‘’சாப்பாடு பரிமாற வேணாமா’’ என்று கேட்க ‘’உன் கையில அடிபட்டது சரியா போச்சா’’ என்று அண்ணாமலை கேட்கிறார். உடனே விஜயா ‘’என் கையில அடிபட்டுச்சா இல்லையே நல்லாதான் இருக்கு’’ என்று சொல்ல ‘’நல்லா இருக்குல்ல நீயே போய் போட்டு சாப்பிடு’’ என்று பல்பு கொடுக்கிறார் அண்ணாமலை.
தெரியவரும் உண்மை!
முத்து மீனா கடைக்கு வந்து நகை வாங்க இறுதியாக ஒரு நகையை தேர்வு செய்து ‘’எங்க கிட்ட பழைய நகை இருக்கு அதை வச்சுட்டு இதை குடுங்க’’ என்று சொல்லி நகையை எடுத்துக் கொடுக்கின்றனர். பிறகு நகை வாங்கி எஸ்டிமேஷன் போடச் சொல்ல அது கவரிங் நகை என கடைக்காரர் கண்டுபிடித்து விடுகிறார்.
நகை உண்மையால் வெடிக்கப்போகும் பூகம்பம் என்னவாக இருக்கும்?!