‘சிறகடிக்க ஆசை’ இன்று : காஞ்சிபுரம் புடவை Vs ஆந்திரா பெசராட்டு தோசை… மீனாவை கூலாக்கிய முத்து!
சவாலில் தோற்ற மீனா!
மீனா மீண்டும் பூ கட்டுப்பவர்களிடம் வந்து நடந்த விஷயத்தை சொல்ல அவர்கள் ‘’நாங்கதான் சொன்னோம்ல’’ என்று சிரிக்கின்றனர். ‘’அவர் வேலைக்கு போற அவசரத்துல சொல்லாம போயிட்டாரு’’ என்று மீனா முத்துவுக்கு சப்போர்ட் செய்து பேச ‘’கல்யாணமான ஒரு வருஷம் மட்டும்தான் நாம சுடுதண்ணி வச்சு கொடுத்தா கூட அது தேனா தெரியும்… அதுக்கப்புறம் நம்மள கண்டுக்க மாட்டாங்க’’ என்று சொல்லி மீனாவிடம் பெட்டு கட்டிய பணத்தைக் கேட்க மீனா ‘’என் வீட்டுக்காரர் ஏதோ அவசரத்துல சொல்லாம போயிட்டாரு’’ என்று மீண்டும் சொல்ல ‘’சரி உனக்கு இன்னொரு அவகாசம் தரோம்… முத்துவுக்கு போன் போட்டு எப்படி இருந்துச்சுன்னு கேளு’’ என்று சொல்ல மீனா முத்துவிற்கு போன் போடுகிறாள்.
திட்டி விட்ட முத்து!
முத்து போனை எடுக்க மீனா ‘’எங்க இருக்கீங்க’’ என்று கேட்க ‘’காஞ்சிபுரத்துக்கு ஒரு சவாரி போயிட்டு இருக்கேன்’’ என்று சொல்கிறான். ‘’காலையில சாப்பிட்ட டிபன் எப்படி இருந்தது’’ என்று கேட்க ‘’மீனா நானே அவசரமா சவாரிய பிக்அப் பண்ண டைம் ஆயிடுச்சுன்னு போயிட்டு இருக்கேன்… இப்ப போன் பண்ணி இது நல்லா இருந்ததா? அது நல்லா இருந்ததான்னு கேக்குற… திட்டி விட்ருவேன்… போனை வை’’ என்று வைத்து விடுகிறான். திரும்பவும் பூக்கட்டும் பெண்கள் மீனாவை கலாய்க்க மீனா ‘’அவர் கார் ஓட்டிட்டு இருக்காரு… இல்லன்னா சொல்லி இருப்பாரு’’ என்று சமாளித்து உங்களுக்கு பணம் தானே வேணும் என 50 ரூபாவை எடுத்துக் கொடுத்து அங்கிருந்து கிளம்பி வருகிறாள்.
பார்வதி கொடுத்த ஐடியா!
பார்வதி வீட்டுக்கு வந்த விஜயா ‘’அந்த வீட்டுல எனக்கு மரியாதையே இல்ல… இந்த பூக்காரி சம்பாதிக்கிற திமிரை அடிக்கடி காட்றா… ஸ்ருதி என்னை மதிக்கிறதே கிடையாது. பையன் ரவி, என் புருஷன் மாதிரியே வாய மூடிக்கிட்டு இருக்கான். இந்த மனோஜ் என்னடானா ஏழு கலர்ல டிரஸ் வாங்கி வச்சுக்கிட்டு அதுதான் போடுவேன்னு சொல்லிக்கிட்டு இருக்கான். இந்த முத்து உண்டியலை எடுத்துட்டு வந்து உருட்டிக்கிட்டு இருக்கான். ரோகிணியோட அப்பா இன்னும் ஜெயில்ல இருந்து வெளியே வந்த பாடு இல்ல… எனக்கு அந்த வீட்ல மரியாதையே இல்ல’’ என்று புலம்புகிறாள். ‘’எனக்குன்னு ஒரு வேலை இருந்தா தான் அந்த வீட்டில் எனக்கு மரியாதை இருக்கும்’’ என்று சொல்கிறாள்.
உடனே பார்வதி ‘’இந்த புது சிம் வாங்கினா மூணு மாசத்துக்கு ஃப்ரீயா பேசிக்கலாம் இல்ல… குறைஞ்ச விலை சொல்லுவாங்க… அதே மாதிரி பண்ணா’’ என்ன என்று கேட்க விஜயா ‘’என்ன ஓசியில் கிளாஸ் எடுக்க சொல்றியா’’ என்று கோபப்படுகிறாள். ‘’நான் அப்படி சொல்ல வரல… முதல் மாதம் ஃபீஸ் வாங்க வேண்டாம். வீட்டோட கரன்ட் பில்லை நான்தானே கட்டப் போறேன்… வாடகை எனக்குதான தரப்போறே… அதெல்லாம் வேணாம்… டான்ஸ் கத்துக்க முதல் மாதம் ஃபீஸ் கிடையாதுன்னு சொல்லிடலாம்… ஆனா யூனிபார்ம் வாங்கி ஆகணும்னு சொல்லி எக்ஸ்ட்ரா பணத்துக்கு வித்துடலாம்’’ என்று ஐடியா கொடுக்க விஜயா ‘’இந்த ஐடியாவும் நல்லா தான் இருக்கு எனக்கு நல்ல நேரம் பிறந்துடுச்சு… இப்பவே டிரஸ் வாங்கிடலாம்’’ என்று சொல்லி கிளம்பி வருகிறாள்.
கிரிஷுக்கு ரோகிணியின் கிஃப்ட்!
ரோகிணி ஒரு கடைக்கு கோட் சூட் வாங்குவதற்காக வருகிறாள். ‘’என் பையனுக்கு கோட்டு சூட்டு பாக்கணும்’’ என்று சொல்லி எடுத்துக்காட்ட சொல்ல அதிலிருந்து இரண்டு டிரஸ்ஸை தேர்வு செய்து கிரிஷ்க்கு வீடியோ கால் செய்து ‘’உனக்கு எந்த கலர் பிடிச்சிருக்கு’’ என்று கேட்டு ஒரு டிரஸ்ஸை தேர்வு செய்து பேக் செய்யச் சொல்கிறாள். இதே கடைக்கு விஜயா மற்றும் பார்வதி என இருவரும் வந்து பரதநாட்டிய யூனிஃபார்ம் எடுக்கின்றனர். பிறகு ரோகிணி கீழே வருவதை விஜயா பார்த்து விட ரோகிணி ‘’நீ என்ன பண்ற’’ என்று கேட்க ‘’ஒரு சின்ன ஷாப்பிங்’’ என்று சொல்கிறாள். இந்த நேரத்தில் கடைக்காரர் ‘’மேடம் நீங்க செலக்ட் பண்ண டிரஸ் ஸ்டாக் பண்ணியாச்சு உங்க பையனுக்கு ரொம்ப பிடிக்கும்னு நினைக்கிறேன்… கவுன்ட்டர்ல குடுத்துடறேன்’’ என்று போட்டுக் கொடுக்கிறான். விஜயா ‘’பையனா என்ன சொல்ற… இவ என்னோட மருமக… இன்னும் அவளுக்கு குழந்தையே பிறக்கல’’ என்று அவனிடம் சண்டைக்குப் போக ரோகிணி விஜயாவை சமாளித்து அவரை அனுப்பி வைக்கிறாள். ‘’என்னோட க்ளையன்ட் பையனதான் அப்படி சொல்லிட்டாரு. எல்லாம் பேக்கேஜா பண்ணி கொடுக்கிறேன்’’ என்று சமாளிக்கிறாள்.
பிறகு பில் போட விஜயாவுக்கு 6000 ரோகிணிக்கு 10 ஆயிரம் என்று சொல்ல ‘’இவ்வளவு காசுல எதுக்கு யாரோ ஒரு பையனுக்கு டிரஸ் வாங்குற’’ என்று விஜயா கேள்வி கேட்க ‘’இதெல்லாம் அவங்க பே பண்ணிடுவாங்க’’ என்று சொல்வதோடு விஜயாவை சமாளிக்க ‘’உங்களுடைய பில்லையும் நானே சேர்த்து கட்டுறேன்’’ என்று சொல்கிறாள். ‘’இதான் சாக்கு’’ என்று விஜயா காஸ்ட்லியான ஸ்கிரீன் துணி ஒன்றையும் எடுத்து அதுக்கும் சேர்த்து பில்லு கட்ட வைக்கிறாள்.
‘’பார்வதி பசிக்குது’’ என்று சொன்னதும் ‘’பக்கத்துல ஒரு பெரிய ஹோட்டல் இருக்கு அங்க போய் சாப்பிட்டு போலாம் ரோகிணி பில்லு கட்டிடுவா’’ என்று அதற்கும் ரோகிணி தலையில் மிளகாய் அரைக்கிறாள். ‘’உங்க கண்ணுல போய் மாட்டிக்கிட்டேனே’’ என்று ரோகிணி பயங்கர கடுப்பாகிறாள்.
புடவையுடன் வந்த முத்து!
காஞ்சிபுரம் சவாரிக்கு போன முத்து மீனாவுக்காக புடவை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு வருகிறான். மீனாவை கூப்பிட்டு ‘’உனக்காக ஒன்னு வாங்கிட்டு வந்திருக்கேன்’’ என்று சொல்ல மீனா ‘’கல்லா, மண்ணா’’ என கேட்டு முத்துவை வெறுப்பேற்ற முத்து ‘’உனக்காக ஆசை ஆசையா புடவை வாங்கிட்டு வந்திருக்கேன்’’ என்று எடுத்துக் கொடுக்க ‘’ஓ அப்படியா சரி’’ என்று மீனா அப்படியே வைத்துவிட்டு கிச்சனுக்கு செல்ல முத்து ‘’என்ன நல்லா இருக்கு… நல்லா இல்லன்னு ஒண்ணுமே சொல்லாம போற’’ என்று கேள்வி கேட்கிறான்.
முத்துவை மடக்கிய மீனா!
‘’ஓ அந்த பதில் எல்லாம் சொல்லனுமா… காலையில உங்களுக்காக பெசரட்டு ஒன்னு சமைச்சு கொடுத்தேன். அது எப்படி இருந்ததுன்னு சொன்னீங்களா’’ என்று கேள்வி கேட்கிறாள். ‘’உங்களால எனக்கு 50 ரூபாய் நஷ்டம்’’ என்று கோபப்படுகிறாள். பெட்டு கட்டிய விஷயத்தை சொல்ல ‘’நீ எதுக்கு அதெல்லாம் கட்டுன… என்கிட்ட சொல்லவே இல்லையே’’ என்று சொல்கிறான்.
மீனாவை சமாதானப்படுத்த ‘’சிவாஜி கணேசன் நடிச்ச படம் எல்லாம் நல்லாத்தான் இருக்கும்… அதுக்காக ஒவ்வொரு படத்துக்கும் நல்லா இருக்கு, சூப்பரா இருக்குன்னு சொல்லிக்கிட்டா இருக்க முடியும். அதே மாதிரி கண்ணதாசன் பாட்டு ஒவ்வொண்ணும் நல்லா இருக்கும்… தனித்தனியா சொல்லிக்கிட்டு இருக்க முடியுமா? அதே மாதிரி தான் நீ சமைச்சாலே அது நல்லா தான் இருக்கும்’’ என்று ஐஸ் வைக்க மீனா வெளியில் காட்டிக் கொள்ளாமல் சிரிக்க முத்து புடவை கொடுத்து சாரி சொல்ல மீனா புடவை வாங்கிக்கொண்டு கிச்சனுக்குள் ஓடுகிறாள்.
முத்துவுக்கு சர்ப்ரைஸ்!
முத்து ‘’மீனா ஏதாவது சொல்லிட்டு போ… எதுவும் சொல்லாம போனா என்ன அர்த்தம்? நீ வெளியே வரியா இல்லையா… இல்ல நான் வெளியே கிளம்பி போயிடவா’’ என்று கேட்டுக் கொண்டிருக்க மீனா பதில் சொல்லாமல் இருக்க முத்து வெளியே கிளம்பும்போது கதவை திறந்து கொண்டு முத்து வாங்கி கொடுத்த புடவையில் வந்து நிற்கிறாள். ‘’புடவை ரொம்ப சூப்பரா இருக்கு மீனா’’ என்று முத்து சந்தோஷத்துடன் சொல்கிறான். பிறகு ‘’உங்க போனை குடுங்க’’ என்று கேட்க முத்து ‘’எதுக்குன்னு கேட்க’’ மீனா ‘’எதுக்குன்னு சொன்னா தான் குடுப்பீங்களா’’ என்று கோபமாக முத்து போனை எடுத்துக் கொடுக்கிறான். பிறகு இருவரும் சேர்ந்து போட்டோ எடுத்துக் கொள்கின்றனர். முத்து மீனாவுக்கு புடவை மடிப்பை சரி செய்து கூலாக்குகிறான்.
காஞ்சிபுரம் புடவை Vs ஆந்திரா பெசராட்டு தோசை!