Siragadikka Aasai : மரண பயத்தை காட்டிய முத்து... கையும் களவுமாக சிக்கிய மனோஜ், விஜயா!
முத்துவுக்கு போட்டியாக எலுமிச்சம்பழம்!
முத்து வைத்த எலுமிச்சம் பழத்துக்கு போட்டியாக விஜயா மந்திரித்து வைத்த எலுமிச்சம் பழத்தை வைக்க அது உருண்டோட ''இப்ப நீ போய் வை'' என மனோஜை பிடித்து தள்ள மனோஜ் பழத்தை எடுத்து மேலே வைத்து அது உருண்டோடாமல் இருக்க ஒரு பூவையும் வைக்கிறான். முத்து வீட்டுக்கு வர பூஜை அறையில் இன்னொரு எலுமிச்சம் பழம் இருப்பதை பார்த்து சந்தோஷப்படுகிறான். மீனாவை கூப்பிட்டு ''நான் கொண்டுவந்து வச்ச எலுமிச்சம் பழத்துக்கு உண்மையாவே பவர் இருக்கு போலயே... குட்டி எல்லாம் போட்டு இருக்கு'' என்று சொல்லி காட்ட மீனா 'இதை யார் வச்சிருப்பா' என யோசிக்கிறாள்.
பிறகு ரோகிணி அந்த வழியாக வர மீனா அவளிடம் ''நீங்க ஏதாவது எலுமிச்சம் பழம் வச்சீங்களா'' என்று கேட்க ''நான் எதுக்கு வைக்கப் போறேன்... அதான் முத்து ஏதோ பழத்தை கொண்டு வந்து வச்சிருக்காரே'' என்று சொல்கிறாள். ''இன்னொரு எலுமிச்சம்பழம் இருக்கு'' என்று சொன்னதும் ரோகிணி பூஜை அறைக்குள் சென்று பார்க்கிறாள்.
விஜயா கொடுத்த பதில்!
''நான்தான்டா வெச்சேன்... அதுக்கு என்ன இப்போ'' என்று விஜயா குரல் கொடுத்தபடி வெளியே வருகிறாள். ''நீ கண்ட கண்ட எலுமிச்சம் பழத்தை எடுத்துட்டு வந்து வீட்ல வச்சிருக்க... கோயிலுக்குப் போனேன் அங்க சாமி பாதத்தில் வெச்சு எலுமிச்சம் பழத்தை கொடுத்தாங்க'' என்று சொல்ல ''எந்த கோயில்'' என்று கேட்க ''உனக்கு சொன்னா தெரியவா போகுது... சாராயக்கடை தான் தெரியும்'' என்று முத்துவை வேண்டுமென்றே கோபப்படுத்துகிறாள்.
மீனாவுக்கு வந்த சந்தேகம்!
விஜயா மற்றும் மனோஜ் என இருவரும் பேசுவதை கேட்ட மீனா இப்பதான் எனக்கு உங்க அண்ணன் மேல முழுசா சந்தேகம் வந்திருக்கு என்று சொல்கிறாள். மனோஜ் தூக்கம் வராமல் தவித்தபடி அடிக்கடி எழுந்து வாயை பார்த்தபடி இருக்க முத்து கதவை தட்டி விட்டு ஓடி ஒளிந்து கொள்ள மனோஜ் கதவை திறந்து பார்த்து யாரும் இல்லாததால் அவனுக்கு இன்னும் பயம் அதிகமாகிறது. முத்து திரும்ப திரும்ப அதே போல் செய்ய மனோஜின் பயம் அதிகமாகி கதவை திறந்தே வைத்து படுத்து விடுகிறான்.
முத்து ஒரு எலுமிச்சம் பழத்தை எடுத்து அதில் நூலை கோர்த்து மனோஜ் பெட்டியின் மீது தூக்கிப்போட்டு எலுமிச்சம்பழம் உருண்டு வருவது போல செய்து பயத்தை மேலும் அதிகமாக்க மனோஜ் விஜயாவுக்கு போன் போட்டு ''பயமா இருக்குமா'' என்று சொல்ல விஜயாவும் தூக்கமில்லாமல் இருப்பதாகச் சொல்லி ஹாலுக்கு வருகிறாள்.
மனோஜ் கொடுத்த ஐடியா, மாட்டிக்கொண்ட விஜயா!
மனோஜ் ''அந்த பழம் இருக்கிற வரைக்கும் தானே பயம்... அதை தூக்கிப்போட்றலாம்'' என்று சொல்ல விஜயாவும் சரி என்று சம்மதித்து நைசாக பூஜை அறைக்கு சென்று முத்து வைத்த பழத்தை எடுத்து வர மனோஜ் ''நாம வச்ச பழத்தையும் கொண்டு வந்துருங்க... அப்பதான் சந்தேகம் வராது'' என்று சொல்ல விஜயா ''இத மட்டும் நல்லா அறிவா யோசி'' என்று திட்டி அந்த பழத்தையும் கொண்டு வருகிறாள். மொட்டை மாடிக்கு போய் ''இதை வெளியில தூக்கி போட்றலாம்'' என்று சொல்லி இருவரும் கிளம்ப எல்லா பக்கமும் லைட் ஆன் ஆக இருவரும் கையும் களவுமாக சிக்கிக் கொள்கின்றனர்.
மாட்டிய பிறகும் சமாளிக்கும் விஜயா!
முத்து ''நான்தான் சொன்னேன்லப்பா நைட்டு தூங்காத... இன்னைக்கு ஒரு பெரிய கச்சேரி நடக்கும்னு'' என்று சொல்கிறான். விஜயா ''கண்ட கண்ட எலுமிச்சம் பழத்தை எல்லாம் வீட்ல வச்சா வீட்டுக்கு நல்லது இல்ல... அதனால தான் தூக்கி போட போனேன்'' என்று சொல்ல மனோஜும் ஆமாம் சாமி போடுகிறான். ''சரி அவர் வச்ச பழத்த தூக்கி போடுறீங்க... நீங்க வச்ச பழத்தை எதுக்கு எடுத்து வந்தீங்க'' என்று மீனா கேள்வி கேட்டு மடக்குகிறாள்.
''அப்போ நகைய எடுத்தது மனோஜ்தானா'' என்று ரவி கேட்க விஜயா ''அவன் இல்லை'' என்று கோபப்படுகிறாள். ''அதான் ஆன்ட்டி பதில் சொல்லிட்டாங்களே... அப்புறம் எதுக்கு மனோஜை கேள்வி கேட்டுட்டு இருக்கீங்க'' என்று ரோகிணி மனோஜை ரூமுக்கு அழைத்துச் செல்ல மடக்கிப்பிடிக்கும் முத்து ''நம்பர் ஒன் அக்யூஸ்ட் அவன்தான்... கேஸ் நடந்துட்டு இருக்கும்போது எப்படி போகலாம்'' என்று மடக்குகிறான். ''ஒழுங்கு மரியாதையா உண்மைய சொல்லிடு'' என்று முத்து மிரட்ட உண்மையைச் சொல்வானா மனோஜ்!
நகை மேட்டர் நீண்டுக்கிட்டே போகுது!