'சிறகடிக்க ஆசை' இன்று : பணத்துடன் வந்த ரோகிணி… மீனாவிடம் மன்னிப்பு கேட்கச் சொன்ன ஸ்ருதி!
பணத்துடன் வந்த ரோகிணி!
பணத்துடன் மனோஜ் மற்றும் ரோகிணி வீட்டுக்கு வர மனோஜ் நேராக அண்ணாமலையிடம் வந்து ‘’அம்மா எங்கப்பா’’ என்று கேட்க ‘’அவர் எனக்கு என்ன தெரியும்? நீயும் உங்க அம்மாவும்தானே கூட்டு களவாணிங்க… அவ என்ன பண்றான்னு உனக்கு தான் தெரியும்’’ என்று பதிலடி கொடுக்கிறார். ‘’அம்மா எங்கன்னு கேட்டது ஒரு குத்தமா’’ என்று மனோஜ் கேட்க ரோகிணி ‘’அங்கிள் ஆன்ட்டி கிட்ட பேச மாட்டார்னு தெரியும்ல… ரூம்ல தான் இருப்பாங்க நீ போய் கூப்பிடு’’ என்று அனுப்பி வைக்கிறாள்.
மனோஜ் விஜயாவை கதவைத் தட்டி வெளியே கூப்பிட ரோகிணி மீனா மற்றும் முத்துவை கூப்பிடுகிறாள். ரவி மற்றும் சுருதியையும் கேட்க ‘’அவங்க இன்னும் வரலை’’ என்று சொல்கிறாள் மீனா. அடுத்ததாக ரோகிணி பணத்தை எடுத்து மனோஜிடம் கொடுத்து ‘’இதுல ரெண்டு லட்சம் இருக்கு... மீனாவோட நகைக்கான பணம்’’ என்று சொல்ல ‘’இந்த பணத்துக்காகத்தானே எல்லாரும் மாறி மாறி அடிச்சீங்க… இந்தாங்க அவன் கிட்ட கொடுத்துடுங்க’’ என்று சொல்லிக் கொடுக்க அண்ணாமலை ‘’என்னுடைய நகையையா தூக்கிட்டு போன? யாருடைய நகையை எடுத்தயோ அவங்க கிட்ட குடு’’ என்று சொல்கிறார்.
ரோகிணியும் ‘’முத்து கிட்ட கொடு’’ என்று சொல்ல முத்து ‘’எனக்கு இந்த பணம் வேண்டாம்’’ என்று சொல்ல ‘’வேண்டாம் ரொம்ப நல்லதா போச்சு’’ என்று பணத்துடன் ரூமுக்கு எஸ்கேப் ஆக பார்க்கிறான் மனோஜ்.
மடக்கிப் பிடித்த அண்ணாமலை!
‘’நைசா நழுவாத’’ என்று மடக்கிப் பிடிக்கும் அண்ணாமலை முத்துவிடம் ‘’எதுக்கு பணம் வேண்டாம்னு சொல்ற’’ என்று கேள்வி கேட்க ‘’கொடுக்க வேண்டியது 4 லட்சம்தானே… இதுல 2 லட்சம்தான் இருக்கு’’ என்று சொல்ல ரோகிணி ‘’இப்போதைக்கு இதை வாங்கிக்கோங்க மீதி பணத்தை சீக்கிரம் கொடுத்துடுறேன்’’ என்று சொல்ல மீனா ‘’அதான் சொல்றாங்கல, கொடுத்துடுவாங்க வாங்கிக்கங்க’’ என்று சொல்ல பணத்தை வாங்கும் முத்து ‘’எல்லாம் நல்ல நோட்டு தானே? நீ கள்ளநோட்டு கொடுத்தாலும் கொடுப்ப… எல்லா ஃபிராடு வேலையும் பண்ணுவ’’ என்று மனோஜை கடுப்படிக்கிறான்.
அதிர்ச்சி கொடுத்த அண்ணாமலை!
முத்து மீனாவிடம் பணத்தை கொடுத்து ‘’பீரோல வெச்சு பூட்டி சாவியை நீயே வச்சுக்க. திரும்பவும் ஆட்டைய போட்டாலும் போட்டுடுவான்’’ என்கிறான். விஜயா ‘’போதுமாடி 2 லட்சம் பணத்தை எடுத்துட்டு வந்து கொடுத்துட்டா என் மருமக ரோகிணி’’ என்று பெருமையாக பேச அண்ணாமலை ரோகிணியிடம் ‘’உன் புருஷனும் அவனோட அம்மாவும் சேர்ந்து பண்ண தப்புக்கு நீ பணத்தை கொடுக்கிற… இனிமேலாவது திருந்தச் சொல்லு’’ என்று சொல்கிறார்.
‘’இவகிட்ட பேசுறது மட்டும் இல்ல… முன்னாடி உட்கார்றது கூட தப்புதான்’’ என்று எழுந்து சென்று விடுகிறார்.
பணத்தை வைத்து மீனா போட்ட திட்டம்!
கிச்சனுக்கு வந்த முத்து ‘’வேலையெல்லாம் முடிஞ்சிடுச்சா… நாளைக்கு சீக்கிரம் வெளியே போகணும் நீயும் ரெடியாயிடு’’ என்று சொல்ல ‘’எங்க’’ என்று மீனா கேட்க ‘’அதான் 2 லட்சம் ரூபாய் பணம் கொடுத்து இருக்காங்களே… அதை வீட்ல வச்சிருக்க முடியாது. உனக்கு நகை எடுத்துடலாம்’’ என்று சொல்ல மீனா ‘’எனக்கு நீங்க சம்பாதிச்சு அந்தப் பணத்துல நகை எடுத்து கொடுத்தாதான் போட்டுப்பேன். அதில் இருந்து நான் மாற மாட்டேன்… இந்த பணத்தை வச்சு இன்னொரு கார் வாங்கலாம்… இரண்டு கார் ஓடுனா கூடிய சீக்கிரம் பணத்தை சேர்த்து ரூம் கட்ட முடியும்’’ என்று சொல்கிறாள். முத்துவும் சரி என்று சம்மதம் சொல்கிறான்.
மீனா ‘’மாமா அத்தை கிட்ட பேசவே மாட்றாரு... திரும்பவும் அவர்கிட்ட பேசி பார்க்கலாம்’’ என்று சொல்ல இருவரும் வெளியே வர அண்ணாமலை சோஃபாவில் படுப்பதை பார்த்து ‘’இங்கே எதுக்குப்பா படுக்கிற’’ என்று முத்து கேட்க அண்ணாமலை ‘’சாப்பிட்டாச்சு தூங்க வேண்டாமா’’ என்று சொல்ல ‘’ரூம்ல போய் தூங்கு பா’’ என்று சொல்கிறான். அண்ணாமலை ‘’எனக்கு எங்க படுத்தாலும் தூக்கம் வரும்’’ என்று சொல்ல திரும்பவும் அம்மாவிடம் ‘’பேசுப்பா’’ என்று ஆரம்பிக்க ‘’இது எனக்கும் என் பொண்டாட்டிக்கும் இருக்க பிரச்சனை… இதுல தலையிடாதேன்னு சொல்லி இருக்கேன்ல’’ என்று கோபப்படுகிறார்.
‘’உனக்கு டஸ்ட் அலர்ஜி இருக்குப்பா… இங்க படுத்தா உனக்கு செட்டாகாது என்று சொல்லிக் கொண்டிருக்க’’ விஜயா பாய், பெட் ஷீட்டுடன் வெளியே வந்து ‘’யாரும் எனக்காக வெளியே படுக்க வேணாம். எனக்கு ரொம்ப குளிருது. நான் இங்க படுத்துகிறேன்’’ என்று சொல்ல அண்ணாமலை உள்ளே எழுந்து சென்று விடுகிறார். மீனா ‘’நீங்களும் உள்ளவே படுத்துக்கோங்க அத்தை’’ என்று சொல்ல ‘’நான் வெளியே வந்ததுனால் தான் அவர் உள்ள போயிருக்காரு… நீ நினைச்ச மாதிரியே நடந்துடுச்சு சந்தோஷமா’’ என்று கோபப்படுகிறாள்.
ரோகிணி - ஸ்ருதி சண்டை!
அடுத்த நாள் காலை சுருதி எழுந்து வர மீனா அவளுக்கு காபி கொடுக்க பின்னாடியே ரோகிணியும் வர அவளுக்கும் காபி கொடுக்க ‘’ஆன்ட்டிக்கு கொடுத்தீங்களா’’ என்று கேட்க மீனா ‘’நான் கொண்டு போனேன் அவங்க வேண்டாம்னு சொல்லி கோபப்பட்டாங்க’’ என்று சொல்கிறாள். ‘’ஆன்ட்டி உங்க மேல எதுக்கு கோபப்படணும்’’ என்று ஸ்ருதி கேட்க ‘’முத்துவும் மீனாவும் ஓவரா பேசிட்டாங்கள்ல அதனாலதான்’’ என்று ரோகிணி சொல்ல ‘’ஆக்சுவலா ஆன்ட்டி மனோஜ் மேல தான் கோபப்படனும்… அவரால தானே இவ்வளவு பிரச்னையும் அவர் மட்டும் நகை எடுக்காம இருந்திருந்தா இதெல்லாம் நடந்திருக்குமா’’ என்று சொல்ல ‘’மனோஜ் தெரியாம பண்ணிட்டாரு’’ என்று ரோகிணி வக்காலத்து வாங்குகிறாள்.
‘’மீனா நகையை எடுத்தது தெரியாம பண்ண விஷயமா’’ என்று மடக்கிப் பிடிக்கிறாள் சுருதி. இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் உருவாக மீனா ‘’இந்த வீட்ல ஏற்கனவே நிறைய பிரச்சனை போயிட்டு இருக்கு… நமக்குள்ளயும் சண்டை வேண்டாம்’’ என்று சமாதானம் செய்கிறாள். ‘’இப்போதைக்கு அத்தையும் மாமாவையும் பேச வைக்கணும்… அதுக்கு ஏதாவது செய்யலாம்’’ என்று சொல்கிறாள்.
ஸ்ருதி ‘’அது அவங்களோட பர்சனல்… அதுல நாம எப்படி தலையிட முடியும்’’ என்று கேட்க மீனா ‘’அவங்கள இப்படியே விட்டா பேசாமலேயே போயிடுவாங்க… நான் மாமா கிட்ட எவ்வளவோ பேசி பாத்துட்டேன்… அவர் அத்தை கிட்ட பேச மாட்டேன்னு உறுதியா இருக்காரு. அத்தை கிட்ட நான் பேசுனா எனக்கு திட்டு தான் விழும்… அதனால நாம மூணு பேரும் சேர்ந்து அத்தை கிட்ட போய் மாமா கிட்ட பேச சொல்லி பேசி பார்க்கலாம்’’ என்கிறாள்.
கோபப்பட்ட விஜயா!
மூன்று பேரும் ஒன்றாக விஜயாவிடம் வர ‘’என்ன விஷயம் மூணு பேரும் ஒண்ணா வந்து இருக்கீங்க’’ என்று கேட்க ரோகிணி ‘’நீங்க கொஞ்சம் மாமா கிட்ட பேசுங்க’’ என்று சொல்கிறாள். ‘’நான் எதுக்கு அவர்கிட்ட பேசணும்? அவர்தான் என்கிட்ட பேச மாட்டேன்னு சொல்லிட்டாரு... என் முகத்தைக் கூட பாக்காம திருப்பிக்கிட்டு போறாரு. இப்போ இந்த வீட்டோட மகாராணி இவ தானே… எல்லாத்தையும் இவகிட்ட சொல்லிட்டுதான் போறாரு’’ என்று மீனாவை திட்ட ஸ்ருதி ‘’மீனா என்ன தப்பு பண்ணாங்க’’ என்று சப்போர்ட்டுக்கு வருகிறாள்.
‘’தப்பு பண்ணது நீங்கதான்… நீங்க எதுக்கு மீனா நகையை எடுத்துக் கொடுத்தீங்க? மனோஜ்க்கு உதவி செய்யறதா இருந்தா நீங்க உங்க நகையை எடுத்துக் கொடுத்து இருக்கலாம்ல. அது மட்டுமில்ல இன்னொரு தப்பும் பண்ணியிருக்கீங்க… நகை மீனா வீட்ல தான் மாறி இருக்கும்னு பொய் சொன்னீங்க. அதுவும் தப்பு தானே’’ என்று சொல்கிறாள் ஸ்ருதி. ‘’இப்படி எல்லாம் பேச சொல்லி உன்னை கூட்டிட்டு வந்தாளா’’ என்று விஜயா கேட்க ‘’மீனா எதுக்கு அத்தை எதுக்கெடுத்தாலும் என்னை திட்டுறீங்க… நான் எதுவும் சொல்லி கூட்டிட்டு வரல, நீங்களும் மாமாவும் பேசாம இருக்கிறது கஷ்டமா இருக்கு அதனாலதான் உங்ககிட்ட பேசலாம்னு வந்தோம்’’ என்று சொல்கிறாள்.
ரோகிணி ‘’நீங்க போய் மாமா கிட்ட பேசுங்க’’ என்று சொல்ல ஸ்ருதி ‘’அதுக்கு ஒரு ஐடியா இருக்கு… நீங்க போய் பேசணும்னு கூட கிடையாது… ஒரு விஷயம் பண்ணா அவரே உங்ககிட்ட வந்து பேசுவாரு’’ என்று சொல்ல எல்லோரும் என்ன அது என்று தெரியாமல் முழிக்க ‘’மீனா கிட்ட சாரி கேளுங்க… எல்லாம் சரியாகிவிடும்’’ என்று சொல்கிறாள். உடனே ரோகிணி ‘’என்ன ஆன்ட்டி மீனா கிட்ட சாரி கேக்கணுமா’’ என்று கேட்க ‘’ஆன்ட்டி மட்டும் இல்ல மனோஜூம் கேக்கணும்’’ என்று சொல்கிறாள். ‘’பாத்தியாமா நாம எல்லாரும் போய் இவ கால்ல விழுந்து மன்னிப்பு கேட்கணும் போல’’ என்று விஜயா கோபப்பட ‘’அத்தை நீங்க என்கிட்ட மன்னிப்பெல்லாம் கேட்க வேண்டாம்… மாமா கிட்ட பேசுங்க’’ என்று சொல்கிறாள் மீனா.
‘’பிரச்சனையை தீர்த்து வைக்க இது ஒன்னு தான் வழி… யோசிச்சு பார்த்து முடிவெடுங்க’’ என்று சொல்லி வெளியே வந்து விடுகிறாள் ஸ்ருதி. ‘’இந்த பணக்கார திமிர் பிடிச்ச ஸ்ருதி எப்படி பேசிட்டு போறா பாத்தியா’’ என்று ரோகிணியிடம் புலம்புகிறாள் விஜயா. ‘’அவங்க என்னன்னா சொல்லிட்டு போகட்டும் நீங்க யார்கிட்டயும் மன்னிப்பு கேட்க வேண்டாம்’’ என்று சொல்கிறாள் ரோகிணி. ‘’எனக்கு இங்கே இருக்கவே புடிக்கல… நான் பார்வதி வீட்டு வரைக்கும் போயிட்டு வரேன்’’ என்று கிளம்பி வருகிறாள்.
கார் வாங்க வந்த முத்து!
மீனா கொடுத்த ஐடியாவால் செல்வத்தை கூட்டிக்கொண்டு முத்து கார் வாங்க வந்திருக்க ‘’என்னடா திடீர்னு புதுசா கார் வாங்குற’’ என்று கேட்க ‘’மீனாதான் ஐடியா கொடுத்தா.. மனோஜ் கொடுத்த ரெண்டு லட்சம் பணம் இருக்கு அதனாலதான்’’ என்று விளக்கம் கொடுக்கிறான்.
கார் வாங்கும் படலம் என்னாகுமோ… விஜயாவிடம் அண்ணாமலை பேசுவாரா?!