Siragadikka Aasai : பழியை திருப்பி விட்ட மனோஜ்... நகையை தூக்கி வீசிய விஜயா... அண்ணாமலை வைத்த செக்!
விஜயா - அண்ணாமலையின் பிடிவாதம்!
மீனா ''அத்தை இன்னும் வெளில வரல... ஏதாவது செஞ்சுக்கப் போறாங்க... பயமா இருக்கு'' என்று சொல்ல முத்து ''அவங்க அப்படி எல்லாம் எதுவும் பண்ணிக்க மாட்டாங்க... எல்லார் முகத்தையும் பார்க்கறதுக்கு அவமானப்பட்டுக்கிட்டு ரூமுக்குள்ளவே இருக்காங்க'' என்று சொல்கிறான். ''ஏதாவது பண்ணி அத்தையை வெளியே வர வைங்க'' என்று சொல்ல முத்து யோசித்து ''அவங்களை வெளியே கொண்டு வர ஒரே ஒருத்தரால் மட்டும் தான் முடியும்.... நான் வர சொல்றேன்'' என்று போனை எடுத்துக் கொண்டு வெளியே செல்கிறான்.
பழியை திருப்பி விட்ட மனோஜ்!
மனோஜ், ரோகிணி வெளியே வர இன்னமும் விஜயா ரூமுக்குள்ளவே இருப்பதால் மீண்டும் கதவைத் தட்ட தொடங்குகின்றனர். ''மனோஜ் எல்லாத்துக்கும் காரணம் நீதான்'' என முத்துவை திட்ட முத்து ''எல்லாம் பண்ணிட்டு... இப்போ பழியை என் மேல போடுறியா'' என்று கோபப்படுகிறான். ''உனக்கென்ன அம்மாவுக்கு ஏதாவது ஆச்சுன்னா நீ சந்தோஷமாதான் இருப்ப'' என்று சொல்ல முத்து கோபப்பட ரோகிணி ''மனோஜ் சொல்றதும் சரிதானே... ஆன்ட்டிக்கு ஏதாச்சு ஒன்னுனா முத்து ஏன் கவலைப்பட போறாரு...'' என்று சொல்ல ''மீனா தெரியாம பேசாதீங்க ரோகிணி, நீங்க பார்த்தீங்களா அவர் எதுவும் பண்ணலன்னு? அத்தை வெளியே கொண்டு வர என்ன பண்ணனுமோ... அதை அவர் பண்ணிக்கிட்டுதான் இருக்காரு'' என்று பதிலடி கொடுக்கிறாள்.
மனோஜை அடிக்க பாய்ந்த முத்து!
''இவன் என்ன பண்ண போறான்... இவனுக்கு என்ன பாசமா இருக்கு'' என்று பேசும் மனோஜ் ''அம்மாவுக்கு மட்டும் ஏதாச்சு ஆச்சு... உன்ன சும்மா விடமாட்டேன்'' என்று சொல்ல முத்து பதிலடி கொடுக்க இருவருக்கும் கைகலப்பாக முத்து மனோஜை அடிக்க பாய்கிறான். ரவி ஓடி வந்து இருவரையும் பிரித்து விட்டு ''முதல்ல அம்மாவை வெளியே கொண்டு வரதைப் பத்தி யோசிப்போம்'' என்று சொல்கிறான். ''பண்றது எல்லாம் பண்ணிட்டு பழிய என் மேல தூக்கி போடுறான் பாருடா'' என்று பஞ்சாயத்து வைக்கிறான் முத்து.
வீட்டுக்கு வந்து பார்வதி, பல்பு வாங்கிய ரோகிணி!
அதன் பிறகு பார்வதி வீட்டுக்கு வர அண்ணாமலை ''என்னம்மா இந்த நேரத்தில் நீ இங்க'' என்று கேட்க ''முத்து தான் விஜயா கோச்சுக்கிட்டு ரூமுக்குள் போய் கதவை திறக்கலைன்னு சொன்னான். விஜயா பண்ணது தப்புதான் அவ மனோஜ் மேல இருக்க பாசத்துல இப்படி பண்ணிட்டா அதுக்காக பேச மாட்டேன்னு சொன்னா என்ன அர்த்தம்? அவளை வெளியே வர சொல்லுங்க'' என்று கேட்க அண்ணாமலை மீண்டும் ''முடியாது'' என மறுக்கிறார். மீனா ''இவர் எதுவும் பண்ண மாட்டார்னு சொன்னீங்களே... அத்தையை பத்தி நல்லா தெரிஞ்ச ஒரு ஆள் இவர்தான்... அதனால்தான் பார்வதி அம்மாவை வர சொன்னாரு'' என்று ரோகிணிக்கு பல்பு கொடுக்கிறாள்.
கதவைத் தட்டிய பார்வதி, அடிவாங்கிய மனோஜ்!
பார்வதி கதவை தட்ட விஜயா அப்போதும் திறக்காமல் இருக்க மனோஜ் ''எனக்கு ரொம்ப பயமா இருக்கு ரவி... வாடா கதவை உடைக்கலாம்'' என்று சொல்லி ஓடிப்போய் கதவில் மோதி தோளில் அடி வாங்கி ஓரமாக வந்து நிற்கிறான்.
கதவைத் திறந்த விஜயா!
பார்வதி ''நீ வெளியே கூட வர வேண்டாம் கதவைத் திற... நான் உள்ள வரேன்'' என்று சொன்னதும் விஜயா தாழ்பாளை திறந்து பார்வதியை உள்ளே இழுத்துக் கொள்கிறாள். உள்ளே போன பார்வதியும் ரொம்ப நேரமாக வெளியே வராமல் இருக்கிறாள். அதன் பிறகு சரி நான் கிளம்புறேன் கைய கொடு என்று சொல்லி, விஜயாவை பிடித்து வெளியே இழுத்து விடுகிறாள் பார்வதி. அதன் பிறகு பார்வதி அண்ணாமலையிடம் ''மனோஜ் மேல இருக்கிற பாசத்துல தெரியாம பண்ணிட்டா மன்னிச்சுடுங்க'' என்று சொல்ல முத்து ''மன்னிக்கறதுக்கு அவங்க இன்னும் மன்னிப்பே கேட்கலையே'' என்று சொல்கிறான்.
செக் வைத்த அண்ணாமலை!
பார்வதி ''அதெல்லாம் கேட்பா'' என்று சொல்லி விஜயாவை மன்னிப்பு கேட்க சொல்ல அண்ணாமலை ''கேட்க வேண்டியது என்கிட்ட இல்ல'' என்று அதிர்ச்சி கொடுக்கிறார். பார்வதி ''என்ன சொல்றீங்க யார்கிட்ட மன்னிப்பு கேட்கணும் என்று கேட்க செய்யற தப்பையும் செஞ்சிட்டு அந்த அப்பாவி பொண்ணு மீனாவோட குடும்பத்து மேலயும் என் அம்மா மேலையும் பழி போட்டதுக்கு மீனா கிட்ட தான் மன்னிப்பு கேட்கணும்'' என்று அதிர்ச்சி கொடுக்கிறார். ஸ்ருதி ''அங்கிள் சொல்றது சரி தான்'' என்று சொல்ல மனோஜ் ''அம்மா மீனா கிட்ட மன்னிப்பு கேட்கணுமா'' என்று கோபப்பட முத்து ''தப்பு பண்ணா மன்னிப்பு கேட்கணும்'' என்று சொல்கிறான்.
ஆவேசமான விஜயா!
''இதுக்கு தானே ஆசைப்பட்ட இப்ப உனக்கு குளுகுளுனு இருக்குமே'' என்று மீனாவை பார்த்து கேள்வி கேட்க அவர் ''அத்தை நான் ஏன் அப்படி நினைக்க போறேன். நீங்க அதெல்லாம் கேட்க வேண்டாம்'' என்று சொல்ல ''என் உடம்புல உயிர் இருக்க வரைக்கும் நான் இறங்கி வரமாட்டேன்'' என்று சொல்கிறாள் விஜயா.
அண்ணாமலை ''மன்னிப்பு கேட்க முடியுமா முடியாதா'' என்று கேட்க ''முடியாது'' என அடம் பிடிக்கும் விஜயா ''பெருசா அம்மா வீட்டுல இருந்து சீதனம் கொண்டு வந்துட்ட... இதுக்குத்தானே இப்படி எல்லாரும் முன்னாடியும் என்னை அவமானப்படுத்தின'' என்று தனது வளையலை கழட்டி மீனாவின் முகத்தில் வீசி எறிந்து ''பொறுக்கிட்டு போ'' என்று சொல்கிறாள்.
கண்ணீருடன் நின்ற மீனா!
இதனால் மீனா கண்ணீருடன் நிற்க முத்து ''அஇதெல்லாம் நல்லா இல்ல வேற யாராவது இருந்தா இங்க நடக்கிறதே வேற'' என்று கோபப்பட ''என்னடா பண்ணுவ... தலையை எடுத்துடுவியா வா எடு'' என்று விஜயா கோபப்படுகிறாள். ''இந்த திமிர் தனத்துக்கு தான் இவ கிட்ட எனக்கு பேசவே புடிக்கல'' என்று அண்ணாமலை சொல்ல... எபிசோட் ஃப்ரீஸ்!
மீனாவுக்கு முத்து ஆறுதல் சொல்லப்போவது எப்படி?!