வெற்றி,தோல்வியை தீர்மானிப்பது எது... சின்னத்திரையில் என்ன நடக்கிறது?!
தமிழ் சின்னத்திரையில் சன் டிவி விஜய் டிவி ஜீ தமிழ் என பல்வேறு சேனல்கள் முன்னணி தொலைக்காட்சி சேனல்களாக விளங்கி வருகின்றன.
இந்த சேனல்களில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு. குறிப்பாக சன் டிவி மற்றும் விஜய் டிவி சீரியல்கள் மக்கள் மத்தியில் அதிக அளவில் விரும்பப்படுபவையாக இருந்து வருகிறது. வெள்ளி திரையை காட்டிலும் அதிக மக்களை சென்றடையும் ஒன்றாக சின்னத்திரை விளங்கி வருகிறது.
அப்படி இருந்தும் சின்னத்திரை சீரியல்கள் வெற்றி தோல்வி என்பது கவனிக்கத்தக்க ஒன்றாக உள்ளது. எப்படிப்பட்ட சீரியல்கள் மக்களை கவர்ந்து வெற்றி பெறுகின்றன? தோல்வியை சந்திக்கும் சீரியல்களுக்கான காரணங்கள் என்ன? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம் வாங்க.
பொதுவாக சீரியல்களின் வெற்றி என்பது அதன் கதைக்களத்தை வைத்து தான் தீர்மானிக்கப்படுகிறது. காமெடி, ஆக்சன் எமோஷன் என அனைத்தும் கலந்த சீரியல்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கிறது.
அதேபோல் விறுவிறுப்பான திரைக்கதை கொண்ட சீரியல்கள் நல்ல ரேட்டிங்குடன் மக்களை கவர்ந்து வருகின்றன. இதற்கு எடுத்துக்காட்டாக விஜய் டிவியின் 'சிறகடிக்க ஆசை', சன் டிவியின் 'சிங்க பெண்ணே', 'கயல்' போன்ற சீரியல்களை சொல்லலாம்.
பெண்களை வைத்து பெண்ணியம் பேசும் கதைகளுக்கும் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இதற்கு எடுத்துக்காட்டாக எதிர்நீச்சல் சீரியலை சொல்லலாம். மாரிமுத்துவின் மறைவுக்குப் பிறகு இந்த சீரியலும் வலுவில்லாத திரைக்கதையால் சறுக்கத்தை சந்திக்க தொடங்கி விட்டது என்பது வேறு கதை.
இது தவிர வித்தியாசமான கதைக்களத்தை கொண்ட சீரியல்கள் மக்களை கவர்கின்றன. மீண்டும் மீண்டும் ஒரே மாதிரியான கதைகளுடன் வெளியாகும் தொடர்கள் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.